விஜய்க்கு ஏற்ற ஜோடி சினேகா என நடிகை நயன்தாரா ஓபன் டாக்! - என்ன நடக்கிறது கோலிவுட்டில்?

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இருவருமே, தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி இருப்பர். இந்த படத்தின் மீதுள்ள காதலே இன்னும் குறையாத நிலையில், இப்படத்தின் அடுத்த பாகத்தை இயக்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார்.

Update: 2024-09-16 18:30 GMT
Click the Play button to listen to article

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களைகட்ட தொடங்கியிருக்கிறது தமிழ் சினிமா. பெரிய ஸ்டார்களின் படங்கள் குறித்த அப்டேட்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. சமீபத்தில் ரஜினி - மஞ்சு வாரியாரின் லைட் மூவ்ஸில் அனிருத்தின் பேங் இசையில் வெளியாகியிருக்கும் ‘மனசிலாயோ’ பாடல்தான் இப்போது ட்ரெண்டில் இருக்கிறது. தொடர்ந்து என்னென்ன படங்கள் எப்போது ரிலீஸாகப் போகின்றன? படப்பிடிப்பு தளங்களில் என்ன நடக்கிறது? என்பது குறித்த ஹாட் செய்திகளை பார்க்கலாம்.

வெளியானது தளபதி 69 அப்டேட்!

சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைத்து முழுநேர அரசியலில் ஈடுபட தயாராகிவரும் நடிகர் விஜய்யின் கடைசி படம் குறித்த எதிர்பார்ப்பானது எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. ‘கோட்’ படத்தின் ரிலீஸுக்கு முன்பே, விஜய்யின் கடைசி படத்தை தான் இயக்கவிருப்பதாக ஹெச்.வினோத் ஏற்கனவே உறுதிபடுத்தியிருந்த நிலையில், படம் குறித்த அப்டேட்டுக்காக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் ‘தளபதி 69’ படத்தை கே.வி.என் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, படம் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.


‘தளபதி 69’ படம் குறித்து கே.வி.என் ப்ரொடக்‌ஷன்ஸ் ட்வீட்

மேலும் இந்த படத்தில் யார்யார் நடிக்கவிருக்கிறார்கள்? தொழில்நுட்ப கலைஞர்கள் யார்? என்பது குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் அரசியல் வேண்டாம், முழுக்க முழுக்க கமர்ஷியலாகத்தான் இருக்கவேண்டும் என விஜய் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டதாக ஹெச். வினோத் கூறியிருக்கும் நிலையில், படத்தின் கதை என்னவாக இருக்கும் என டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள். 

வைரலாகும் போஸ்டர்

வடிவேலு - சுந்தர் சி கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். காரணம், வின்னர், தலைநகரம் போன்ற படங்களில் இவ்விருவரின் கூட்டணியும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக, இந்த படங்களுக்கு உயிரூட்டியதே வடிவேலுவின் காமெடி எனலாம். இருவரும் அடுத்தடுத்து பல படங்களில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் சேர்ந்து நடிக்காமல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.


வடிவேலுவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘கேங்கர்ஸ்’ போஸ்டர்

இந்நிலையில்தான் ‘அரண்மனை -4’ படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கும் புதிய படத்தில் வடிவேலு நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. மேலும் சமீபத்தில் படபிடிப்பு தொடங்கப்பட்டு சத்தமில்லாமல் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. 15 வருடங்களுக்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் சேர்ந்திருக்கும் நிலையில் வடிவேலுவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ‘கேங்கர்ஸ்’ என தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்தில் வடிவேலு சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் கலக்கவிருக்கிறார்.

காஞ்சனா-4 கதாநாயகி இவரா?

2007ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘முனி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. 2011ஆம் ஆண்டு ‘காஞ்சனா’ என்ற பெயரில் அடுத்த பேய்ப்படத்தை இயக்கினார் ராகவா லாரன்ஸ். இந்த படத்தின் வெற்றியால் கிடைத்த உந்துதலால் அடுத்தடுத்து இதுவரை 3 பாகங்களை இயக்கிவிட்டார்.


‘காஞ்சனா-4’ படபிடிப்பு குறித்து ராகவா லாரன்ஸ் 

மேலும் ‘சந்திரமுகி 2’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என வேறு இயக்குநர்களின் படங்களில் பிஸியாக ஓடிக்கொண்டிருந்த லாரன்ஸிடம் ‘காஞ்சனா-4’ எப்போது? என ரசிகர்கள் கேட்க, விரைவில் எதிர்பார்க்கலாம் என கூறியிருந்தார். இந்நிலையில் 4ஆம் பாகத்திற்கான கதை மற்றும் திரைக்கதை பணிகள் முடிந்துவிட்டதாகவும், அடுத்து நடிகர்களை தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டேவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தயாராகிறது 96 இரண்டாம் பாகம்!

நீண்டகால இடைவெளிக்கு பிறகு 90ஸ் கிட்ஸ்களின் மனதுக்கு நெருக்கமாக அமைந்த திரைப்படம் ‘96’. பள்ளிப்பருவ காதல் தோல்வியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடித்தீர்த்தனர். இந்த படத்துக்கு பிறகு ராம் - ஜானு என காதலன் - காதலிகளை பட்டபெயரிட்டே அழைக்கத் தொடங்கினர். விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இருவருமே, தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி இருப்பர். இந்த படத்தின் மீதுள்ள காதலே இன்னும் குறையாத நிலையில், இப்படத்தின் அடுத்த பாகத்தை இயக்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார்.


திரிஷா - விஜய் சேதுபதி மீண்டும் இணையவிருக்கும் ‘96’ - 2ஆம் பாகம் குறித்து இயக்குநரின் அப்டேட்

கதையை விஜய் சேதுபதியின் மனைவியிடம் சொன்னதாகவும், அவருக்கு மிகவும் பிடித்துபோய்விட்டதாகவும் கூறியிருக்கிறார். இதிலும் விஜய் சேதுபதி - திரிஷாதான் என கூறி ரசிகர்களை குஷிபடுத்தியிருக்கிறார். இவர் இயக்கத்தில் கார்த்தியின் 27வது படமான ‘மெய்யழகன்’ வருகிற 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அடுத்து ‘96’ இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்.

விரைவில் ரிலீஸுக்கு தயாராகும் தக் லைஃப்

‘நாயகன்’ படத்தின் க்ளாசிக் வெற்றிக்கு பிறகு மணிரத்னம் - கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இந்த படத்தில் சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்திருக்கின்றனர். பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போய்கொண்டே இருந்த நிலையில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி போன்ற நட்சத்திரங்கள் படத்திலிருந்து விலகிவிட்டனர். இப்படி இழுத்துக்கொண்டே சென்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை ஒருவழியாக செப்டம்பர் 20-ம் தேதி முடிக்கவுள்ளதாம் படக்குழு.


விரைவில் நிறைவடையும் ‘தக் லைஃப்’ படபிடிப்பு

செர்பியா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நடந்துவந்த படப்பிடிப்பானது முடிவுக்கு வருவதால் படத்தின் இறுதிகட்ட பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது. ‘இந்தியன் 2’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் ராஜ்கமல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் என மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை கமல் மலைபோல் நம்பியிருக்கிறாராம்.

நயனுக்கு பதில் சினேகா?

விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றாலும் வசூல் வேட்டையில் டாப்பில்தான் இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர்கள் என அனைவரும் மாறி மாறி பேட்டிகொடுத்து வருகின்றனர். அப்படியொரு பேட்டியில், சினேகா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நயன்தாராவைத்தான் கேட்டதாகவும், ஆனால் அவரிடம் டேட்ஸ் இல்லாததால் அடுத்து சினேகாவை அணுகியதாகவும் கூறியிருந்தார் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு.


விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்தது குறித்து நயன் கருத்து

அதேபோல், மைக் மோகன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அரவிந்த் சாமி மற்றும் மாதவனைத்தான் கேட்டதாகவும், ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்று கூறி இருவரும் நிராகரித்துவிட்டதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், விஜய்க்கு அம்மாவாக எங்க தலைவியை நடிக்க வைக்க யோசித்தீர்களா? என நயனின் ரசிகர்கள் கொந்தளிக்க, அந்த கதாபாத்திரத்திற்கு சினேகா மிகவும் பொருத்தமாக இருப்பதாக நயனே படம் பார்த்துவிட்டு பாராட்டியதாக தெரிவித்திருக்கிறார் வெங்கட் பிரபு.

வேட்டையன் ஆடியோ லாஞ்ச்!

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மனசிலாயோ’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவருகிறது. இந்த பாடலில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை AI தொழில்நுட்பம் மூலம் மீண்டும் நம் காதுகளுக்கு விருந்தாக கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.


‘வேட்டையன்’ படத்தின் மனசிலாயோ பாடலில் ரஜினியுடன் அனிருத்

இந்நிலையில் படம் வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, இந்த மாத இறுதியில் விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியார், ராணா டகுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் இடம்பெற்றிருப்பதால் ‘ஜெயிலர்’ படம் போன்றே இப்படமும் மாபெரும் வசூல்வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ் அவங்கள விட்டுட்டாங்க!

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்களான ரஃபி, ரிதீஷ் ஆகிய இருவரும் தங்களது நண்பர்களுடன் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகேயுள்ள உணவகத்திற்கு சென்றிருந்தபோது, அங்கு உணவு வாங்க வந்த கல்லூரி மாணவர்களிடையே தகராறில் ஈடுபட்டதுடன், அவர்களை அடித்து காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த மாணவர்கள் இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசார் மனோவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.


தனது மகனுடன் பின்னணி பாடகர் மனோ

ஆனால் அதற்குள் ரஃபி, ரிதீஷ் இருவரும் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவர்களுடைய நண்பர்கள் கூறுகையில், மனோவின் மகன்கள் உட்பட 6 பேர்கொண்ட கும்பல் தங்களுடைய நண்பர்களை தாக்கியதாகவும், சிசிடிவியில் பதிவாகியிருந்த அந்த காட்சிகளை பார்த்த போலீசார், அவர்களிடம் விசாரிக்காமல், தங்களுடைய நண்பர்களின் செல்போன்களை வாங்கிச் சென்றதாகவும் கூறியிருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்