உலகின் மிக உயரமான செங்கல் கோபுரம் "குதுப் மினார்"!
மகாபாரத காலத்தில் துவங்கி இன்றுவரை சுமார் 3000 ஆண்டுகால வரலாற்றை கொண்டிருக்கும் நகரம் இந்திரப்பிரஸ்தம் என்றழைக்கப்பட்ட நவீன இந்தியாவின் தலைநகரான டெல்லி ஆகும். வரலாற்று காலம் தொட்டு அதிகாரத்தின் அடையாளமாக இருந்திருக்கிறது..;
மகாபாரத காலத்தில் துவங்கி இன்றுவரை சுமார் 3000 ஆண்டுகால வரலாற்றை கொண்டிருக்கும் நகரம் இந்திரப்பிரஸ்தம் என்றழைக்கப்பட்ட நவீன இந்தியாவின் தலைநகரான டெல்லி ஆகும். வரலாற்று காலம் தொட்டு அதிகாரத்தின் அடையாளமாக இருந்திருக்கிறது... இருந்துவருகிறது டெல்லி. எத்தனையோ போர்கள், சதிகள், முற்றுகைகள், கவிழ்ப்புகளை சந்தித்திருக்கும் இந்நகரம் இன்று வரலாற்று பாரம்பரியம் கொண்ட பழமையான பாரதத்திற்கும் தொழில்நுட்ப வளர்ச்சி, ஆடம்பர மேற்கத்திய வாழ்க்கைமுறை கொண்ட நவீன இந்தியாவிற்கும் இடையில் இயங்கும் ஒரு கலாச்சார தொட்டிலாக விளங்குகிறது. இந்த நகரத்தின் நீண்ட நெடிய வரலாற்றுக்கு அத்தாட்சியாக வானுயர நிற்கும் குதுப் மினாரின் வரலாறு பற்றி விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.
குதுப் உதின் ஐபக் என்பவரால் கட்டப்பட்ட குதுப் மினார்
குதுப் மினாரின் வரலாறு
கி.பி 1200ஆம் ஆண்டு டெல்லி சுல்தான் வம்சத்தை தோற்றுவித்தவரான குதுப் உதின் ஐபக் என்பவரால் குதுப் மினார் கட்டப்பட்டிருக்கிறது. இவருக்கு பின்னர் வந்த இல்துமிஷ் என்பவர் கி.பி 1220ஆம் ஆண்டு குதுப் மினாரில் மேலும் இரண்டு அடுக்குகளை கட்டியிருக்கிறார். அதன்பிறகு 1369ஆம் ஆண்டு இடி தாக்கியதன் காரணமாக சிதலமடைந்த குதுப் மினாரை பிரோஸ் ஷாஹ் துக்ளக் என்ற மன்னன் சீரமைத்தது மட்டுமில்லாமல் செங்கற்கள் மற்றும் பளிங்கு கற்களை கொண்டு மேலும் இரண்டு அடுக்குகளை புதிதாக கட்டியிருக்கிறான்.
இஸ்லாமிய கட்டிடக்கலையின் முக்கிய அம்சங்களில் ஒன்றான குதுப் மினார்
குதுப் மினாரின் கட்டிட அமைப்பு
தூபி என்பது இஸ்லாமிய கட்டிடக்கலையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். மசூதிகளில் நாம் பார்க்கும் உயரமான தூண்கள்தான் தூபி எனப்படுபவை. அக்காலத்தில் செய்திகளை தெரிவிக்கவும், போர் பற்றிய எச்சரிக்கைகளை அனுப்பவும், தொழுகை செய்வதற்கான நேரம் ஆகிவிட்டதை சுட்டிக்காட்டவும் இந்த தூபிகள் கட்டப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட தூபிக்களில் ஒன்றான குதுப் மினாரில் குரானின் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது துருக்கிய மற்றும் பெர்சிய நாட்டு கலை அம்சங்களை உள்ளடக்கிய அழகிய கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது.
குதுப் மினாரின் வெளிப்புறம்
குதுப் மினாரின் பெயர் காரணம்
குதுப் மினாருக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதை கட்டுவதற்கு உத்தரவிட்டது குதுப் உதின் ஐபக் என்பதால் அவரின் பெயரில் இருந்து குதுப் மினார் என்று சூட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. குதுப் மினார் கட்டப்பட்ட காலத்தில் டெல்லியில் மிகப்பிரபலமாக விளங்கிய சூபி ஞானி குதுபுதின் பக்தியர் காகி என்பவரின் பெயரில் இருந்தும் இக்கட்டிடதிற்க்கான பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
73 மீட்டர் உயரத்திற்கு நிற்கும் குதுப் மினார்
மிக உயரமான குதுப் மினார்
73 மீட்டர் உயரத்தில் நிற்கும் குதுப் மினார், உலகின் மிக உயரமான செங்கல் மினாராகும். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் உள்ளது. கோபுரத்தின் உள்ளே, மேலே செல்வதற்காக 379 படிக்கட்டுகள் உள்ளன. ஆரம்பகால ஆப்கானிய கட்டிடக்கலை பாணியை வெளிப்படுத்தும் கோபுரம், ஆப்கானிஸ்தானில் உள்ள ஜாம் மினாரிலிருந்து உத்வேகம் கொண்டு கட்டப்பட்டதாகும்.
குப்தர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இரும்புத்தூண்
குதுப் மினாரின் சிறப்பு
குதுப் மினார் வளாகத்தில் குப்தர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இரும்புத்தூண் ஒன்றையும் நாம் காணலாம். இது கிட்டத்தட்ட 2000 வருடங்களாக இதே இடத்தில் கொஞ்சம் கூட துருப்பிடிக்காமல் நிற்பது ஒரு அறிவியல் அதிசயமாகும். குதுப் மினார் கட்டப்படுவதற்கு பல வருடங்கள் முன்பிருந்தே இருக்கும் இந்த இரும்புத்தூனில் 'பிராமி' எழுத்துக்குறிப்புகள் காணப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையினுள் எப்படி படிக்கட்டுகள் மூலம் அதன் உச்சிக்கு சென்று பார்க்கலாமோ அதுபோலத்தான் குதுப்மினாரின் உள்ளும் அதன் உச்சி வரை மக்கள் சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், டிசம்பர்4, 1981ஆம் ஆண்டு இதனுள் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி நாற்பதுக்கும் அதிகமான மக்கள் பலியாகியிருக்கின்றனர். அதன் பிறகு பொதுமக்கள் இதனுள் சென்றுவர தடைவிதிக்கப்பட்டது.
பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் சூழ்ந்து நிற்கும் குதுப்மினார்
குதுப் மினார் பல பெரிய வரலாற்று நினைவுச்சின்னங்களால் சூழப்பட்டுள்ளது மற்றும் அவை அனைத்தும் ஒன்றாக "குதுப் வளாகம்" என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த வளாகத்தில் பின்வருவன அடங்கும். டெல்லியின் இரும்புத் தூண், குவாத்-உல்-இஸ்லாம் மசூதி, அலை தர்வாசா, இல்துமிஷ் கல்லறை, அலை மினார், அலா-உத்-தினின் மதரஸா மற்றும் கல்லறை, இமாம் ஜமீனின் கல்லறை, மேஜர் ஸ்மித்தின் குபோலா ஆகியவை குதுப் மினாரை சுற்றி உள்ள வரலாற்று நினைவுச் சின்னங்களாகும்.
இந்தியாவின் முதல் மசூதி
குதுப் மினார் அருகில்தான் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மசூதி உள்ளது. இந்த மசூதியின் பெயர் ஆங்கிலத்தில் "The Might of Islam Mosque" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த மசூதி ஒரு இந்து கோவிலின் அடித்தளத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் சாராம்சத்தை நீங்கள் இப்போதும் பார்வையிடும்போது காணலாம். 2019 ஆம் ஆண்டில், இந்திய தொல்லியல் துறையானது டெல்லியில் இரவு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக குதுப் மினாரின் வளாகத்தின் வெளிச்சப் பணிகளை மேற்கொண்டது.
குதுப் மினார் அருகில் இருக்கும் இந்தியாவின் முதல் மசூதி
குதுப் மினார் சுற்றுலா
குதுப் மினாரின் அழகை கண்டு ஆராயந்து மகிழ, இந்த கட்டிடக்கலை அற்புதத்தை எப்போது பார்வையிட வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். குதுப் மினாரை பார்வையிட காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். டெல்லிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, நவம்பர் முதல் மார்ச் வரை, நகரத்தையும் இந்த மினாரையும் சுற்றிப் பார்க்க சிறந்த காலமாக இருக்கும். இந்த மாதங்களில் கடுமையான வெப்பம் இல்லாமல், இதமான காலநிலை நிலவும். மேலும் மினாருக்கு அருகிலுள்ள சில அற்புதமான தருணங்களைப் படம்பிடிக்கவும் இது ஒரு சரியான நேரமாக இருக்கும்.