உலகின் கொடூர சிறை! கைதிகளுக்கு 2 தட்டு! ஒன்று உணவு சாப்பிட! ஒன்று மலம் கழிக்க!
நல்ல உணவு, குடிநீர், உலகத்தரம் மிக்க மருத்துவமனைகள், ஆரோக்கியமான வாழ்விடங்கள் என இன்று நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனால், இவையெல்லாம் நம் முன்னோர்கள் செய்த தியாகங்களின் பயன்தான். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன், அவர்களின் தியாகங்களை பெருமையுடன் நினைவுகூருவது.
நல்ல உணவு, குடிநீர், உலகத்தரம் மிக்க மருத்துவமனைகள், ஆரோக்கியமான வாழ்விடங்கள் என இன்று நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனால், இவையெல்லாம் நம் முன்னோர்கள் செய்த தியாகங்களின் பயன்தான். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன், அவர்களின் தியாகங்களை பெருமையுடன் நினைவுகூருவது. நம் முன்னோர்கள் செய்த தியாகத்தின் அடையாளமாக காலத்தை கடந்து நிற்கிறது அந்தமானில் உள்ள 'செல்லுலார் ஜெயில்'. இந்த சிறையின் ஒவ்வொரு செங்கல்லும் நம் முன்னோர்கள் எதிர்கொண்ட சித்திரவதைகளை நமக்கு சொல்லும். இப்படி பல கொடுமைகள் அரங்கேறிய செல்லுலார் ஜெயிலை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்ப்போம்.
அந்தமான் செல்லுலார் ஜெயில்
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் "செல்லுலார் சிறை"
காலா பானி சிறைச்சாலை என்று அறியப்படும் கொடூர சிறைச்சாலை அந்தமானின் போர்ட் பிளேயர் (ஸ்ரீ விஜயபுரம்) பகுதியில் உள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் இந்தச் சிறைக்கு வரும் கைதிகள் மிகக் கடுமையாக நடத்தப்பட்டனர். மிகக் குறைந்த வசதிகளே இங்கு இருந்தது. கைதிகளுக்கு கொடிய சித்ரவதைகள் நடைபெற்றன. நோய்கள் தாக்கின. ஆங்கிலேயே அரசு, சிறைச்சாலை என்பதைத் தாண்டி, வதைக்கூடமாகவே இந்த செல்லுலார் சிறையைப் பயன்படுத்தியது. இங்கு தண்டனை அனுபவித்தவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் போராட்ட வீரர்கள். இங்கிருந்து நோய்கள் தாக்கியும், மனநல பிரச்சினைகள் ஏற்பட்டும், இறந்து போகாமல் இருந்தவர்கள், தண்டனைக்காலம் முடிந்து மீண்டும் இந்தியா சென்று சுதந்திரப் போராட்டத்தை தொடர முடியாமல் போயினர். போராட்டத்தைத் தொடர்ந்தவர்கள் மிகக் குறைவே. ஏனெனில், அவமானப்படுத்துதல் மூலம் போராளிகளின் மன உறுதியைத் தகர்ப்பதே இந்தச் சிறைச்சாலையின் முதன்மை நோக்கம்.
ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட செல்லுலார் சிறைகள்
சிறைச்சாலைக் கட்டப்படும் முன்!
சிறைச்சாலை கட்டப்படும் முன்னே அந்தமானுக்கு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். அப்போது அந்தப் பகுதி சேறு நிறைந்திருந்தது. கொசுக்கள், ஆபத்தான பாம்புகள், தேள்கள், அட்டைகள், வகை வகையான விஷப் பூச்சிகள் இங்கு ராஜ்ஜியம் செய்தன. நான்கு பக்கமும் சூழ்ந்திருந்த கடல்தான் சிறை. அதைத் தாண்டினால் நீண்ட நெடிய நீள வானம். ஆங்கிலேய அதிகாரிகள் வசதியான கூடாரங்களில் தங்கினர். இந்தியர்களோ தொழுவங்கள் மற்றும் கொட்டகைகளில் இருந்தனர். அங்கிருந்த பழங்குடிகளும்கூட இந்தியர்களை விரோதிகளாகப் பார்த்தனர். அந்தமானின் காற்றில்கூட விஷம் கலந்திருந்தது. பல நோய்கள் இந்தியர்களின் உயிரைக் குடித்தன. விஷப் பூச்சிகள் மிரட்டின. இந்தியர்களுக்கு மருத்துவ வசதிகள் எல்லாம் கிடையாது.
சுதந்திர போராட்ட தியாகிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த செல்லுலார் ஜெயில்
செல்லுலார் சிறையின் கொடுமைகள்
ஆங்கிலேயர்கள் இந்தியர்களை படுபயங்கரமாக வதைத்தனர். தினசரி ஒரு வேளை உணவு மட்டுமே கிடைத்தது. அது அவர்கள் உயிரைப் பிடித்து வைத்துக்கொள்ள மட்டுமே உதவியது. ஆனால் தினமும் கொடுக்கப்பட்ட வேலைகளில் அவர்கள் நொந்து போயினர். இந்தக் கொடுமைகளில் இருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு ஈவு இரக்கமின்றி மரண தண்டனை கொடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் தூக்கிலிடப்பட்டனர். இந்த வதைகளில் இருந்து மீள கைதிகள் மரணத்தை வேண்டினர். மரணம் மட்டுமே இவற்றிலிருந்து விடுவிக்கக் கூடியதாக இருந்தது. மொத்தமாக இந்தச் சிறைச்சாலையில் 690 சிறைகள் இருந்தன. 13.5 அடி நீளம், 7 அடி அகலம் கொண்ட அறைகள். காற்றுக்கூட புக முடியாத படி கட்டப்பட்டன. சிறையின் நடுவே ஒரு பெரிய தூணிலிருந்து ஆங்கிலேய வீரர்களால் சிறை அறைகள் கண்காணிக்கப்பட்டன. சிறுநீர், மலம் கழித்தலுக்கு காலையும் மாலையும் நேரம் ஒதுக்கப்பட்டது. மற்ற நேரங்களில் ஆங்கிலேய அதிகாரிகளை கேட்டால் அடி உதைதான் வழங்கப்படும். சில கைதிகளுக்கு அறையில் இரண்டு தட்டுகளும் ஒரு அலுமினிய டம்ளரும் வழங்கப்பட்டது. அதில் ஒன்றில் உண்ணவும் ஒன்றில் மலம் கழிக்கவும் செய்தனர். சில சமயங்களில் கைதிகள் அறையின் ஒரு மூலையில் மலம் கழிக்க வேண்டியிருந்தது. பின் அதே அறையில் தூங்கவும் செய்தனர். இந்த இருண்ட வாழ்வு நிரந்தரமானதல்ல, ஏனெனில் எப்போதும் யாரும் தூக்கிலிடப்படலாம் என்ற நிலைதான் அங்கு இருந்தது. இதற்காக கட்டுமானத்தின்போதே தூக்கு மேடைகளும் கட்டப்பட்டன.
சுற்றுலா பயணிகளை கவரும் செல்லுலார் சிறைச்சாலை
செல்லுலார் ஜெயிலின் கட்டுமானம்
1896ஆம் ஆண்டு துவங்கி 1906ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் இந்த சிறையின் கட்டுமான பணிகள் நடைபெற்றிருக்கின்றன. இந்த சிறையை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை கொண்டே பிரிட்டிஷ் அரசாங்கம் கட்டியிருக்கிறது. கடும் மழையினாலும், விஷப்பாம்புகளின் கடியாலும், மலேரியா, காலரா போன்ற தொற்று நோய்களாலும் ஆயிரக்கணக்கான கைதிகள் இந்த சிறையின் கட்டுமான பணியின்போதே இறந்திருக்கின்றனர். பர்மாவில் இருந்து வரவழைக்கப்பட்ட செங்கற்கள், மரங்களை கொண்டு ஏழு பிரிவுகளாக இந்த சிறை வளாகம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த வளாகத்தில் மொத்தம் 693 அறைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் மிகக்குறுகலாக, ஒரே ஒருவரை மட்டும் அடைக்கும் அளவுக்கு சிறியதாக இருக்கின்றது. சாவர்கர், பகத் சிங்கின் கூட்டாளியான மகாவீர் சிங் போன்ற பல அரசியல் முக்கியத்துவம் பெற்ற கைதிகள் இந்த சிறையில் கடும் சித்திரவதைக்கு ஆளாகியிருக்கின்றனர்.
செல்லுலார் ஜெயிலின் உட்புறம்
விநோத தண்டனைகள்
1909 - 1931 இடையில் டேவிட் பெர்ரி என்ற பிரிட்டிஷ் அதிகாரி ஜெயிலராக இருந்தார். மாவு இயந்திரங்களை இயக்குவது, எண்ணெய் ஆட்டுவது, கற்களை உடைப்பது, மரம் வெட்டுவது, ஒருவாரம் வரை கைவிலங்கு கால்விலங்கு பூட்டி நிற்கவைப்பது, தனிமை சிறை, நான்கு நாட்கள்வரை பட்டினிப் போடுவது என வினோதமான முறைகளில் தண்டனைகள் வழங்கினார். புதிய வழிகளில் சித்திரவதைகள் செய்வது, கைதிகளை அவமானப்படுத்துவது, விசித்திரமாக மரண தண்டனை அளிப்பது ஆகியவற்றில் அவர் நிபுணராக கருதப்பட்டார். 1942-ம் ஆண்டு அந்தமான், ஜப்பான் கைவசம் சென்றது. பின்னர் மீண்டும் ஆங்கிலேயர்கள் வசம் வந்தது. ஜப்பானியர்கள் காலத்தில் கொடூரத்தின் உச்சங்கள் இங்கு அரங்கேறின. 1945-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தண்டனைக்காக தொடங்கப்பட்ட இந்தச் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் இந்தியாவின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டனர். 1860-ம் ஆண்டு முதல் அதுவரை சுமார் 80 ஆயிரம் கைதிகள் அங்கு தண்டனைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் செல்லுலார் சிறை
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் செல்லுலார் சிறை
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால், கைது செய்யப்பட்டு இந்த சிறையில் அடைக்கப்பட்டு, பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்த வீரர்களை நினைவு கூறுவதற்காக 1979 பிப்ரவரி 11ம் தேதி அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், செல்லுலார் சிறையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டு இந்திய அரசாங்கத்தால் செல்லுலார் சிறை பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்தமான்-நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் இந்த சிறை அமைந்திருக்கிறது. அந்தமான் தீவுகளில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றான இந்த சிறை திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்திருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் வரும் நாட்களில் மாலை நேரத்தில் சுதந்திர போராட்டத்தை பற்றிய ஆவணப்படம் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் திரையிடப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் சிறை வளாகத்தில் ஒலி-ஒளி நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இதனுள் அருங்காட்சியகமும், ஓவியம் மற்றும் புகைப்பட கண்காட்சி கூடமும் இயங்குகின்றன. 1996ஆம் ஆண்டு இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரபு மற்றும் மோகன் லால் நடிப்பில் வெளியான 'சிறைச்சாலை' என்ற திரைப்படத்தில் இந்த காலாபாணி சிறையில் நடந்த கொடுமைகள் அவ்வளவு அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கும். சென்னையில் இருந்து சொகுசு படகு மூலமோ அல்லது விமானம் மூலமோ போர்ட் பிளேர் நகரை எளிதாக அடையலாம். போர்ட் பிளேர் நகரத்தை பற்றிய மேலதிக தகவல்களையும், அங்குள்ள ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்து கொள்ளுங்கள்.