இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவிற்கு தென்கிழக்கு திசையில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவுநாடுதான் இலங்கை. ஆசியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத்தல நாடுகளில் இலங்கை மிக முக்கிய இடத்தில் உள்ளது. இலங்கை ஏராளமான சுற்றுலா இடங்களுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக கலாசாரங்கள் முதல் இயற்கை அழகு, சாகச நடவடிக்கைகள் மற்றும் அழகான கடற்கரைகள்வரை அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இயற்கையான இடங்கள், மரங்கள், செடி கொடிகள், தேயிலை என வெளிநாட்டவர்களை கவரும் ஒரு இடமாகவும் இலங்கை காணப்படுகின்றது. சிறிய நாடு என்றபோதிலும் இங்கு எண்ணிலடங்காத பல அழகிய அம்சங்கள் உள்ளன. அழகு என்று கூறுவதைவிட நிறைய பழமையான விஷயங்கள் பொக்கிஷங்களாக காணப்படுகின்றன. ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஒவ்வொரு கதை உண்டு. அப்படி இலங்கைக்கு பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்தாலும், இந்தியாவிலிருந்தே அதிக சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு படை எடுக்கின்றனர். அப்படிப்பட்ட இலங்கையின் சிறப்பை பற்றியும், அங்கிருக்கும் முக்கியமான சுற்றுலாதலங்கள் பற்றியும் இந்த தொகுப்பில் விரிவாக காண்போம்.

பாசிக்குடா :

மட்டக்களப்பிலிருந்து 35 கி.மீ. தொலைவில் வடமேற்கில் அமைந்துள்ள ஓர் அழகிய பீச்தான் இந்த பாசிக்குடா. வாழைச்சேனை பிரதேசத்திற்கு உட்பட்ட இவ்விடம் இலங்கையின் மிகவும் அழகான கடற்கரைகளுள் ஒன்றாகும். அதிக சத்தமில்லாத அலைகளின் ஓசை, ஆழமில்லாத பெரிய கடற்பரப்பு, கற்பாறைகள், கடற் தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் இயற்கை அழகும், நேர்த்தியாக கட்டப்பட்ட “கபாணா” என்றழைக்கப்படும் உல்லாச விடுதிகளும், படகு சவாரியும், பாசிக்குடாவின் சிறப்புகள். ஈழப்போர் முடிவடைந்த பின்னர்தான் இப்பகுதி சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக மாறி வருகின்றது.


இலங்கையின் மிகவும் அழகான கடற்கரைகளுள் ஒன்றான பாசிக்குடா

சிங்கராஜா வனம் :

இது மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒரு வனமாகும். இது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. இது இலங்கையின் தென் மாகாணங்களான இரத்தினபுரி, காலி உள்ளிட்டவற்றின் எல்லையில் அமைந்துள்ளது. சிங்கராஜா வனம், கடல்மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இங்கு ரசிப்பதற்கு ஏராளமான தாவரங்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் இருக்கின்றன. இதன் முக்கியத்துவம் காரணமாக 1988ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியத்தளமாக அறிவிக்கப்பட்டது.


சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான சிங்கராஜா வனம்

மிகிந்தலை :

இலங்கையில் உள்ள பிரபலமான குன்றுகளில் ஒன்று இந்த மிகிந்தலை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்படும் இயற்கை சீற்றங்களால் மண் உள்ளீர்க்கப்பட்டு, இத்தகைய குன்றுகள் உருவாகின்றன. இதன் அமைவிடம் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தனிமையான மலைக்குன்றுப் பகுதியாகவும் இருக்கின்றது. இதில் மிகிந்தலை மலை, எத்வெகர மலை, ஆனைக்குட்டி மலை மற்றும் ராஜகலலென மலை ஆகிய நான்கு மலைகள் உள்ளடங்கியுள்ளன. அதுமட்டுமில்லாமல் இந்த குன்றுக்கு பல வரலாற்று சிறப்புகள் இருக்கின்றன. அனுராதபுரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த குன்று, அரசர் மகிந்த தேரரின் வருகைக்குப் பின்னர்தான் புண்ணிய இடமாக மாற்றம் செய்யப்பட்டது. இதனால், வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள், புதை பொருட்கள் என பல பொக்கிஷங்கள் இங்கு காணப்படுகின்றன.


பல வரலாற்று சிறப்புகள் நிறைந்த மிகிந்தலை குன்று

அம்பலாங்கொடை கடற்கரை :

இது கொழும்பிலிருந்து ஏறத்தாழ 107 கி.மீ. தூரத்திலும், காலியிலிருந்து ஏறத்தாழ 13 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அம்பலாங்கொடை என்பது இலங்கையின் காலி மாவட்டத்திலுள்ள ஒரு கரையோர நகரமாகும். இந்நகரானது அழகிய மணற் கடற்கரைகளையும் உள்ளூர் கலாச்சார மையங்களையும், 24 மணி நேரமும் இயங்கும் பரபரப்பான மீன் சந்தையையும் கொண்டுள்ளது. அதனால் உங்கள் இனிய பொழுதை இங்கு நன்கு கழிக்கலாம். இந்த நகரத்தில் இரவு நேரங்கள் மிகவும் பயங்கரமாக இருக்குமாம். இந்த நகரத்தில் மட்டுமே சாத்தானை வழிபடும் மக்கள் இருக்கின்றனர். அவர்கள், சாத்தானின் முகமூடிகள், சாத்தானின் நகைகள், சாத்தானின் உடைகள் போன்றவற்றை அணிந்து கொண்டு இரவு நேரங்களில், பண்டைய கால சாத்தானின் நடனத்தை ஆடுவர். அம்பலாங்கொடை கடற்கரையில் இது மிகவும் பிரபலம்.


அழகிய கடற்கரைகளையும், உள்ளூர் கலாச்சார மையங்களையும் கொண்ட அம்பலாங்கொடை கடற்கரை

யாழ்ப்பாணக் கோட்டை :

யாழ்ப்பாணத்தில் நீங்கள் தவறாமல் காணவேண்டிய இடம் இந்த யாழ்ப்பாணக் கோட்டை. யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதன்முதலில் போர்த்துகீசியர்களால் அமைக்கப்பட்ட இக்கோட்டை, பின்னர் ஒல்லாந்தரால் இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம்வரை நல்ல நிலையில் இருந்த இக்கோட்டை பின்னர் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. அதன்பின்னர் சீரமைக்கப்பட்டு தற்போது நல்ல நிலையில் இருக்கிறது. இலங்கைக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாபயணிகள் இங்குதான் வருவர். தற்போது இந்த கட்டிடம் யாழ்ப்பணத்தின் அடையாளமாக விளங்குவதுடன் பிரபலமான சுற்றுலாத்தலமாகவும் விளக்குகின்றது.


யாழ்ப்பாணத்தின் அடையாளமாக விளங்கும் யாழ்ப்பாணக் கோட்டை

யால தேசிய பூங்கா :

இலங்கையிலுள்ள தேசிய வனங்களுள் பிரபலமான ஒன்று இந்த யால தேசிய பூங்கா. அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் பெரிய தேசிய பூங்கா இதுவாகும். இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 300 கி.மீ. தொலைவில் காணப்படும் இக்காடு, மொத்தமாக 979 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. யால தேசிய வனத்தில் வாழும் 215 பறவையினங்களுள் ஆறு இனங்கள் இலங்கைக்குத் தனிச் சிறப்பை தருகின்றன. 2009 ஆம் ஆண்டு இக்காட்டின் உட்பகுதியில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட பின்னர், இங்குவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு கூடியுள்ளது.

பேராதனை பூங்கா :

பேராதனை பூங்கா இலங்கையிலுள்ள மிகப்பெரிய தாவரவியல் பூங்கா ஆகும். இது இலங்கையின் சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக இருந்து வருகிறது. மத்திய மாகாணத்தில் இருக்கும் கண்டி நகரத்தின் மேற்குத் திசை நோக்கிச் செல்கையில் 5.5 கி.மீ. தூரத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவில் இன்று ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டுத் தாவர வகைகள் இருக்கின்றன. இங்குள்ள ஓர்க்கிட் பூங்காவும் மிகவும் புகழ் பெற்றது.


வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பேராதனை பூங்கா

அறுகம் குடா கடற்கரை :

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசம், அறுகம் குடா. கொழும்பிலிருந்து சுமார் 317 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அறுகம் குடாவில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்கு தேவையான சூழ்நிலை காணப்படுவதனால் அதிக சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பத்திற்குரிய இடமாக இந்த இடம் காணப்படுகின்றது. அலைச்சறுக்கு விளையாட்டு சாகசங்கள் நிகழ்த்துவதற்குச் சாதகமான அலைகள் அறுகம் குடாக் கடலில் காணப்படுகின்றன. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்கள் இங்கு அலைச்சறுக்கு விளையாடுவதற்கு உகந்த காலமாக இருக்கும்.

பின்னவெல யானைகள் சரணாலயம் :

1975ஆம் ஆண்டில் இந்த யானைகள் சரணாலயம் ஆரம்பிக்கப்பட்டது. யானைகளைக் கண்டாலே பயப்படுவோர், இந்த சரணாலயத்துக்கு வந்தால், யானைகள் குளிப்பதையும், விளையாடுவதையும், யானைகள் உணவு உண்பதையும் கண்டுகளிக்கலாம். தாய் யானைகளால் கைவிடப்பட்ட குட்டி யானைகளுக்கு உணவளிப்பதற்காகவும் அவற்றுக்கு தங்குமிட வசதியை ஏற்படுத்துவதற்காகவும் பின்னவெல யானைகள் சரணாலயம் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் சுற்றுலாத்தலமாகவும் மாற்றம் பெற்றது.


அழகிய பின்னவெல யானைகள் சரணாலயம்

சிகிரியா :

இலங்கையின் கலைப் பாரம்பரியத்தின் சின்னம் சிகிரியா குகைகள். இவை 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள காசியப்ப மன்னனால் அமைக்கப்பட்டவை. இந்த குகைக்குள் இயற்கை வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பல சித்திரங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக நிறைய பெண்களின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. இதனைக் காண்பதற்கு இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களும் சரி, வெளிநாட்டவர்களும் சரி மிகுந்த ஆர்வத்துடன் வருவதை காண முடிகிறது.

இலங்கையின் முக்கிய சுற்றுலா இடங்களுடன்கூடிய வரைபடம் :


Updated On 10 Jun 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story