இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நம் கற்பனைக்கும் எட்டாத பல வினோத சக்திகள், மர்மமான மற்றும் உயிருக்கு ஆபத்தான இடங்கள் என நிறைந்திருப்பதே இந்த பூமி. அப்படி உலகின் பல இயற்கை அதிசயங்களில், அண்டார்டிகாவில் உள்ள "இரத்த அருவி" என்று அழைக்கப்படும் அருவியும் ஒன்று. இரத்த அருவி உருவானது எப்படி என ஆராய்ச்சியாளர்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தலையைப் பிய்த்துக்கொண்டு ஆராய்ச்சி செய்து வந்ததன் பலனாக தற்போது காரணம் கண்டறியப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் இரத்த அருவியின் மர்மத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.


'மெக் மெர்டோ' பள்ளத்தாக்கில் உள்ள 'டாய்லர் ஃகிளாஸியோ' என்னும் இரத்த அருவி

நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த ஆராய்ச்சி :

அண்டார்டிகாவில் 'மெக் மெர்டோ' என்ற பள்ளத்தாக்கில் 'டாய்லர் ஃகிளாஸியோ' என்னும் அருவி உள்ளது. 1911-ம் ஆண்டு ஹிரிஃபித் டாய்லர் என்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் இந்த அருவியைக் கண்டறிந்ததால் இதற்கு அந்தப் பெயர் வந்தது. இந்த டாய்லர் ஃகிளாஸியோ அருவியில் இருந்து பாய்ந்துவரும் தண்ணீரானது, அடர் சிவப்பு நிறத்தில் பார்ப்பதற்கு இரத்தம் பீறிட்டு வருவதுபோல இருக்கும். அதனால் இந்த அருவியை ஆராய்ச்சியாளர்கள் 'இரத்த அருவி' என்று அழைத்துவருகின்றனர். அண்டார்டிகா பகுதிகளில் வேறு எங்கும் இதுபோல் இல்லை. அப்படி இருக்க, இந்த அருவியில் மட்டும் ஏன் தண்ணீர் இரத்தம்போல வருகிறது என்று கண்டறிய ஆராய்ச்சியாளார்கள் படையே அங்கு முகாமிடத் தொடங்கியது. இந்த ஆராய்ச்சிப் பயணம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்துவந்த நிலையில் தற்போது அதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.


இரும்பு தனிமங்களை கொண்ட டாய்லர் ஃகிளாஸியோ

சிகப்பு நிறத்தின் காரணம் :

இரத்த அருவியில் கொட்டும் நீர் அதிகளவிலான இரும்பு தனிமங்களை கொண்டிருக்கிறது. இந்த நீர், டாய்லர் பனிக்கட்டியின் அடியில் 1.5 மைல் ஆழத்தில் இருந்து வருகிறது. ஆரம்பத்தில்... ''அதிக அளவு பாசிகள் இருப்பதால்தான் இப்படி அடர் சிவப்பு வண்ணத்தில் தண்ணீர் வருகிறது'' என்று காரணம் கூறினார்கள். ஆனால், அது உண்மையான காரணமல்ல என்று வேறு சில ஆராய்ச்சியாளர்கள் மறுத்துவந்தனர். இந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு ஜில் மிக்கூக்கி என்ற ஆராய்ச்சியாளர், அப்பகுதியை ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில், ''இந்த நீரில் ஆக்சிஜன் மூலக்கூறு மிகமிகக் குறைவு. இதில் உயிரிகள் வாழ்வதற்கான மூலக்கூறுகள் கிடையாது. அப்படி இருந்தும் இந்த நீரில் 17 வகையான நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. இது ஆச்சர்யமான ஒரு நிகழ்வாகும். அதோடு மட்டுமில்லாமல் இப்பகுதி முழுவதும் இரும்புத்தாதுக்கள் அதிக அளவில் இருக்கின்றன. எனவே நுண்ணுயிரிகளிலிருந்து வெளிவரும் சல்ஃபர் இரும்புத்தாதுவுடன் வினைபுரிந்து சிவப்பு நிற நீரை உண்டாக்குகிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார். இது ஆராய்ச்சியாளர்களுக்கு ஒருவித தன்னம்பிக்கையைத்தர, மேலும் அப்பகுதியைப் படையெடுக்க ஆரம்பித்தனர்.


செவ்வாய் கிரக சூழலை கொண்டிருக்கும் இரத்த அருவி

செவ்வாய் கிரகத்தின் தன்மையை கொண்டிருக்கும் இரத்த அருவி :

பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் ''ஆக்சிஜன் இல்லாத நிலையில் நுண்ணுயிரிகள் வாழ்வது சாதாரண விஷயம் அல்ல... ரத்த அருவியின் தன்மையை ஆராய்ச்சி செய்கையில் இப்பகுதி முழுவதும் செவ்வாய்க்கிரகத்தில் இருக்கும் சூழ்நிலையைக் கொண்டிருக்கிறது. இப்பகுதியை நன்கு ஆராய்ச்சி செய்தால், செவ்வாய்க்கிரகத்தின் தன்மையைத் துல்லியமாகக் கண்டறியலாம். மேலும், இந்த அருவி சுமார் இரண்டு மில்லியன் வருடத்துக்குமுன் தோன்றியது'' என்று கூறியுள்ளனர். இந்த ரத்த அருவியின் தண்ணீர் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று மட்டுமே தற்போது கண்டறிந்துள்ளனர். ஆனால், இந்த அருவி எங்கு உருவாகிறது? எங்கு முடிகிறது? என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கான ஆராய்ச்சியும் நடைபெற்றுகொண்டிருக்கிறது. விரைவில் இந்த இரத்த அருவி எங்கு உருவாகிறது? எங்கு முடிகிறது? என்று கண்டுபிடித்துவிடுவார்களாம்.


அறிவியல் மற்றும் இயற்கையின் அரிய உண்மைகளை வெளிப்படுத்தும் இரத்த அருவி

இரத்த அருவியின் முக்கியத்துவம் :

இந்த அருவி, பூமியின் மிக சுவாரஸ்யமான இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. இது மனிதர்களுக்கு இயற்கையின் பிரம்மாண்டத்தை உணர்த்துகின்றது. இது நம் கிரகத்தில் உள்ள வேறு எந்த இடத்திலும் காணப்படாத ஒரு தனித்துவமான நிகழ்வு என்பதாலும் மற்றும் பூமியின் மிக தூரமான பகுதிகளில் வாழும் உயிரினங்கள் எப்படி இருக்க முடியும் என்பதைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகவும் உள்ளது. இரத்த அருவியின் சிகப்பு நிறம் பனிக்கட்டியின் அடியில் மறைந்திருக்கும் இயற்கை இரும்பின் காரணமாக உருவாகின்றது. இது வெறும் அருவி அல்ல; அறிவியல் மற்றும் இயற்கையின் அரிய உண்மைகளை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான இடமாக உள்ளது.


பனிக்கட்டியின் அடியில் மறைந்திருக்கும் இயற்கை இரும்பின் காரணமாக உருவாகும் இரத்த அருவி

மக்கள் கூறும் கட்டுக்கதைகள் :

இந்த அருவியைப் பற்றிய பல கதைகளை மக்கள் சொல்லி வருகின்றனர். கதைகளின்படி "அப்பகுதியில் வாழ்ந்துவந்த பூர்வகுடிகளை எதிரிகள் கொன்றுவிட்டனர்; அதனால், அவர்களின் இரத்தம்தான் இப்படி அருவியாகப் பெருகி ஓடுகிறது; இது ஒரு புனித அருவி" என்று மக்கள் கூறிவருகின்றனர்.

Updated On 14 Oct 2024 4:28 PM GMT
ராணி

ராணி

Next Story