இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இங்கு வருபவர்கள் உயிருடன் திரும்புவதில்லை. இருட்டிய பிறகு இங்கு வருபவர்கள் இறந்துவிடுகிறார்கள் அல்லது காணாமல் போகிறார்கள். இவை, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பேய் கோட்டை என அழைக்கப்படும் பாங்கர் கோட்டையைப் பற்றிய அப்பகுதி மக்களின் வார்த்தைகள்தான். "மாலை வேளையில் இந்தப் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்துவிடும். இங்கு இருள் நிலவுவதால் வௌவால்கள் அதிக அளவில் உள்ளன. புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளும் இங்கு வசிக்கின்றன. அந்த விலங்குகளால் இரவு நேரத்தில் ஆபத்துகள் ஏற்படலாம்,” என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இப்படி பல திகில் பின்னணியைக் கொண்ட பாங்கர் கோட்டையைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.


திகில் பின்னணியைக் கொண்ட பாங்கர் கோட்டை

பாங்கர் கோட்டையின் வரலாறு

சூரியன் மறைந்தது முதல் மறுநாள் சூரிய உதயம்வரை இங்கு உள்ளே நுழைவதற்கு கண்டிப்பாக தடை என கோட்டையின் பலகையில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையில் பேய்கள் இருப்பதாக அங்கு வாழும் உள்ளுர் மக்கள் நம்புகின்றனர். பாங்கர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ராஜா மாதவ் சிங்கின் சாம்ராஜ்யத்தின் முக்கிய இடமாக இது இருந்ததாம். ஆனால் கோட்டை கட்டப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு வாழ்ந்தவர்கள் கோட்டையை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். இக்கோட்டையை பற்றி பல கதைகள் கூறப்படுகின்றன.

பாங்கர் கோட்டையின் வரலாறு இரண்டு விதமான புராணக் கதைகளுடன் தொடர்புடையது. அதில் ஒன்று, ராஜா மாதவ் சிங் அங்கிருந்த பாலா நாத் என்ற துறவியிடம் உரிய அனுமதி பெற்று பாங்கர் கோட்டையை எழுப்பினார். அதன் படி, துறவியின் வீட்டின் மீது கோட்டையின் நிழல் ஒருபோதும் விழக்கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு கோட்டை எழுப்பப்பட்டது. ஆனால், மாதவ் சிங்கின் லட்சிய வாரிசுகளில் ஒருவர் கோட்டைகளை செங்குத்தாக எழுப்பியதால், அதன் அச்சுறுத்தும் நிழல் துறவியின் இருப்பிடத்தை மூழ்கடிக்கச் செய்தது. அது நடந்த சிறிது நேரத்திலேயே, கோட்டை முற்றிலும் அழியும்படி அவர் சாபம் விட்டதாகக் கூறப்படுகிறது. அந்நாளில் இருந்து பாங்கர் கோட்டைக்கு பேய் பிடித்தாகக் கூறப்படுகிறது.

பாங்கர் கோட்டைக்கு பின்னால் உள்ள இரண்டாவது புராணக்கதை, முதல் கதையை விட மிகவும் பிரபலமானது. கோட்டைக்கு ஏற்பட்ட பேரழிவு நிலைமைக்கு பாங்கரின் இளவரசி ரத்னாவதிதான் காரணம் என்று கூறப்படுகிறது. ரத்னாவதி மிகவும் அழகாக இருந்ததாகவும், அவளை ஒரு மந்திரவாதி நேசித்ததாகவும் கூறப்படுகிறது. அவளை எப்படியாவது தன்வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்த மந்திரவாதி, அவள் பயன்படுத்தும் அழகு சாதன பொருளில் மயக்க மருந்தை கலந்தானாம். இதனை அறிந்த இளவரசி அந்த பொருளை ஒரு பெரிய பாறை மீது வீசி, அந்த கல் மந்திரவாதியை நசுக்கும்படி சாபம் விட்டதாகக் கூறப்படுகிறது. இறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பு மந்திரவாதி இந்த கோட்டையில் உள்ளவர்களும், கோட்டையைச் சுற்றி உள்ளவர்களும் ஆத்மா இழந்து பேயாக அலைவார்கள் என சாபம் விட்டதாகக் கூறப்படுகிறது. அன்று முதல் அமானுஷ்யம் நிறைந்த கோட்டையாக மாறியது

இறந்தவர்களின் ஆன்மாக்கள் உலவும் கோட்டை?

இந்த கோட்டை சுமார் 450 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவிலேயே அதிக பேய்கள் நடமாடும் இடமாக இது அறியப்படுகிறது. அதிக பேய்க் கதைகள் உலவுவதிலும் இந்தியாவிலேயே இந்தப் பகுதிதான் முதலிடத்தில் உள்ளது. இங்கு இரவில் விசித்திரமான ஒலிகள் கேட்கின்றன. இரவில் இங்கு வருபவர்கள் உயிருடன் திரும்புவதில்லை அல்லது காணாமல் போய்விடுகின்றனர் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இங்கு சில மரணங்கள் நடந்தனவாம். இப்போது இறந்தவர்களின் ஆத்மாக்கள் அந்தக் கோட்டையில் அலைவதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும், சூரிய உதயத்திற்கு முன்பும் கோட்டைக்குள் சுற்றுலாப் பயணிகள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.


450 ஆண்டுகள் பழமையானாலும் இன்றும் திடமாக நிற்கும் பாங்கர் கோட்டையின் சில கட்டிங்கள்

பேய்கள் உலவுகின்றனவா?

இந்தியாவின் பிரபல பாராநார்மல் வல்லுநர் சித்தார்த் கூறுகையில் "எங்கள் குழு 2012இல் இரவில் பாங்கருக்கு சென்றது. ஒரு பாராநார்மல் குழு இந்த இடத்திற்குச் சென்றது இதுவே முதல் முறை. எங்கள் குழு ஒர் இரவு முழுவதும் அங்கேயே தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டது. நாங்கள் கொண்டு சென்ற கருவிகள் ஆராய்ச்சியின் அடிப்படையாக அமைந்தன. அவற்றின் உதவியுடன் நாங்கள் தகவல்களை சேகரித்தோம். இங்கு ஏதேனும் அமானுஷ்ய செயல்பாடு உள்ளதா என்பதைக் கண்டறிய முயன்றோம், ”எங்கள் கருவிகளில் வழக்கத்திற்கு மாறான எந்த ஏற்ற இறக்கங்களையும் நாங்கள் பார்க்கவில்லை. உண்மையில் அந்த இரவில் நாங்கள் உணரும்படியான அல்லது பதிவு செய்யும்படியான எந்தவொரு விஷயமும் நடக்கவில்லை.”

"இந்தப் பகுதியில் பல்வேறு வகையான விலங்குகள் வாழ்கின்றன. அவை வெவ்வேறு ஒலிகளை உருவாக்குகின்றன, இந்தக் கோட்டையில் பல குரங்குகள் வசிக்கின்றன. இங்கிருக்கும் மரங்களில் அவை அமர்ந்திருக்கின்றன. அவை ஏறி இறங்கி விளையாடுவதால் மரத்தின் கிளைகள் அசைகின்றன. உலர்ந்த இலைகள் நசுங்குவதால் ஒலி ஏற்படுகிறது. இவை அனைத்தின் காரணமாகவும் விசித்திரமான ஒலிகள் ஏற்படுகின்றன,” என்று அவர் தெரிவித்துள்ளார். இங்கே உள்ள பிரபலமான பழங்கதைகள் மற்றும் நிகழ்வுகள் காரணமாக, மக்களுக்கு உளவியல் ரீதியான தாக்கம் இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.


இளவரசி ரத்னாவதியின் புகைப்படம்

சுற்றுலாத்தலமான பாங்கர் கோட்டை

ராஜஸ்தானில் உள்ள மற்ற கோட்டைகளைப் போலவே பேய்கள் நிறைந்ததாகக் கூறப்படும் பாங்கர் கோட்டையும் வியக்கத்தக்க வகையில் நன்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் கோட்டையும் அதைச் சுற்றியுள்ள நிறுவனங்களும் பல ஆண்டுகளாக செயல்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த கோட்டையானது இடைக்கால நகரமான ஷாஜஹானாபாத் மாதிரியில் தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திசையிலும் நான்கு பெரிய மர வாயில்கள் உள்ளன. கோட்டையின் வளாகத்தில் ஒரு சிறிய நீர்வீழ்ச்சி மற்றும் பல இந்து கோயில்கள் அலங்காரமாக செதுக்கப்பட்டுள்ளன. கோட்டைக்குள் இருக்கும் சில அரண்மனைகளின் சான்றுகள் கோட்டையின் செழுமையின் தெளிவான குறிகாட்டிகளாக உள்ளன. பகலில் அதன் அமைதியான சூழல் மற்றும் கட்டிடக்கலை அற்புதங்களைக் காண பெருமளவு மக்கள் இங்கு கூடுகின்றனர். பல அமானுஷ்ய கட்டுக்கதைகள் ஒரு பக்கம் இருந்தாலும், பாங்கர் கோட்டை ராஜஸ்தானில் பார்க்கவேண்டிய ஒரு இன்றியமையாத சுற்றுலா தலமாகும்.


பாங்கர் கோட்டைக்கு உள்ளே செல்லும் வழியில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள்

பாங்கர் கோட்டை எங்கிருக்கிறது ?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கும் டெல்லிக்கும் இடைபட்ட பகுதியில் பாங்கர் உள்ளது. பாங்கர் ஒரு வரலாற்றுக்கு முந்தைய இடமாகும். கோட்டை பள்ளத்தாக்கு முழுவதும் இரண்டு உள் கோட்டைகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் சமவெளியில் இருந்து ஐந்து வாயில்களைக் கொண்ட கோபுரங்களால் பிரிக்கப்பட்டுள்ளது.















































பாங்கர் கோட்டையின் சிதிலமடைந்த சில பகுதிகள்

பாங்கர் கோட்டையை எப்படி அடைவது?

ஜெய்ப்பூர் விமான நிலையம், கோட்டைக்கு அருகிலுள்ள விமான நிலையமாகும். ஜெய்ப்பூர் விமான நிலையம் மற்ற நகரங்களுடன் நல்ல விமான இணைப்பைக் கொண்டுள்ளது. பான்காரி ரயில் நிலையம், தௌசா ரயில் நிலையம் ஆகியவை பாங்கர் கோட்டையை அடைவதற்கு அருகிலுள்ள நிலையங்களாகும். ராஜஸ்தான் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ், மண்டோர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், அலா ஹஸ்ரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை உங்களை அங்கு கொண்டு சேர்க்கும். சாலைப் பயணங்களில் ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகள், சுற்றுலாப் பேருந்துகளில் ராஜஸ்தானுக்குச் செல்லலாம் அல்லது தங்கள் தனிப்பட்ட வாகனத்திலும் இந்த கோட்டைக்கு செல்லலாம். கோட்டாவிலிருந்து - லால்சோட் - கோட்டா மெகா ஹெவி வழியாகவும், குவாலியரிலிருந்து - மும்பை - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலை வழியாகவும் மற்றும் ஆக்ராவிலிருந்து NH21 வழியாகவும் கோட்டையை அடையலாம்.

பாங்கர் கோட்டைக்கான கூகுள் மேப்

Updated On 5 Aug 2024 5:06 PM GMT
ராணி

ராணி

Next Story