இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கதவே இல்லாத ஒரு கிராமம். ஒரு வீட்டில் கூட கதவு இருக்காது. இரவிலும்கூட வீடு திறந்தே இருக்கிறது. யாரும் இந்த கிராமத்தில் திருடுவதில்லை. வாசல் கதவு மட்டுமல்ல ஜன்னல் கதவுகள் கூட கிடையாது. அது மட்டுமா? இந்த ஊரில் வங்கியும் இருக்கிறது. அங்கும் கதவுகள் கிடையாது. அதுமட்டுமில்லாமல் இந்த கிராமத்தில் ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. இவ்வளவு ஏன் இந்த கிராமத்தில் ஒரு விலை மதிப்பு மிக்க பொருளை வைத்துவிட்டு சென்றாலும் கூட திரும்பி வரும்வரை அதை யாருமே தொடுவதுமில்லை. இதற்கு பின்னால் பல கதைகள் சொல்லப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் எதாவது பொருள் திருடப்பட்டால் சனீஸ்வரர் கண்ணை பிடிங்கிவிடுவார் என்கிற மூடநம்பிக்கையும் இருக்கிறது. இந்த கிராமத்தின் பெயர் சனி ஷிங்கனாப்பூர். மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் பல ஆச்சர்யங்களை கொண்டுள்ளது. பல மர்மங்கள் நிறைந்த இந்த சனி ஷிங்கனாப்பூர் கிராமத்தை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் காணலாம்.


கதவே இல்லாத சனி ஷிங்கனாப்பூர் கிராமத்திலுள்ள ஒரு வீடு

கதவுகள் இல்லா கிராமம் :

இந்த கிராமத்தில் எவ்வித திருட்டுகளோ, மக்களுக்கு எவ்வித அசம்பாவிதங்களோ நடக்காமல் சனி பகவான் பாதுகாத்து வருவதாக அந்த ஊர் மக்கள் நம்பி வருகின்றனர். இந்த நம்பிக்கை அந்த கிராமத்தில் 300 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இவர்களின் முக்கியத் தொழில் கரும்பு விளைவித்தல் மற்றும் விவசாயம்தான். இவர்களுக்கு இந்த தொழிலில் பெரிய அளவில் லாபம் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து விவசாயம் செய்து வருவது, விவசாயம் மீது அவர்கள் வைத்துள்ள மதிப்பை உணர்த்துகிறது. பேராசை இல்லாத இந்த கிராமத்தினர் தங்கள் பொருட்களை பாதுகாக்க அதிகம் சிரமப்படுவதில்லை. இன்றுவரை பல ஆண்டுகளாக அந்த ஊரில் ஒரு திருட்டு சம்பவம் கூட நடக்கவில்லை. எந்த வீட்டிலும் கதவும் இல்லை. வெறும் திரைசீலைகள் போட்டே வாசல்கள் மூடப்பட்டிருக்கும்.

மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கும் சனி ஷிங்கனாப்பூர் கிராம மக்கள் :

300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் ஒரு சிறிய ஆறு ஓடியுள்ளது. அந்த ஆற்றில் ஒரு நாள் திடீரென வெள்ளம் கரை புரண்டு ஓட, இதனால் ஆற்றங்கரையிலிருந்த பொருட்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன. பின்னர் ஒரு வாரம் கழித்துத்தான் வெள்ளம் நின்றது. இந்நிலையில் வெள்ளம் வடிந்த போது வெள்ளத்தில் பெரிய கருப்பு கல் ஒன்று ஆற்றில் அடித்து வரப்பட்டு அந்த ஆற்றின் அருகே கிடந்தது. அப்படியான கருமை நிற கல் அப்பகுதியில் வேறு எங்கும் இல்லையாம். இப்படி ஒரு கருமையான கல் எங்கிருந்து வந்திருக்கும் என எல்லோருக்கும் ஆச்சர்யம். அதனால் மக்கள் அந்த கல்லைப் பார்க்கக் குவிந்தனர். அந்த கல்லைக் கல் என நினைத்துத் தொடுவதற்கே அப்பகுதி மக்களுக்குப் பயமாக இருந்தது. சிலர் இது ஏதோ விநோதமான பொருள் என நினைத்தனர். அப்பொழுது ஒருவர் ஒரு குச்சியை வைத்து அந்த கல்லைக் குத்தியதாகத் கூறப்படுகிறது . அப்பொழுது அந்த கல்லிலிருந்து ரத்தம் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதைப் பார்த்த மக்கள் பதறியடித்து ஓடி தங்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். அன்று இரவு அந்த ஊர்த் தலைவர் கனவில் வந்த சனி பகவான், தான் அந்த கல் உருவத்தில் வந்திருப்பதாகவும், அந்த பகுதி மக்களைக் காக்கவே வந்திருப்பதாகவும், அந்த கல்லை அந்த ஊரில் உள்ள மக்களுக்கு நேரடியாக அருள் பலிக்கும்படி வைக்க வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்டதாகவும், ஊர் மக்கள் ஒரு கதை கூறுகின்றனர். மறுநாள் முதல், அந்த கல்லை மக்கள் சனீஸ்வர பகவானாக வழிபடத் தொடங்கினர். மேலும் அங்கு கோவில் கட்டவும் முடிவு செய்தனர். அப்பொழுது சனீஸ்வர பகவான் நேரடியாக மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதால், கூரையில்லாமல் வெட்டவெளியில் ஒரு மேடை மட்டும் அமைத்து அதில் அந்த கல்லை வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். பின்னர் வீடுகளில் கதவுகளையும் எடுக்கச் சொல்லி ஊர்த் தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன்பிறகு ஊர் மக்கள் தங்கள் வீடுகளின் கதவுகளையெல்லாம் நீக்கியுள்ளனர். அப்பொழுதுதான் சனிபகவானின் அருள் கிடைக்கும் என அவர்கள் நம்பினர்.


சனி ஷிங்கனாப்பூர் கிராமத்தின் நுழைவு வாயில்

ஓரு பரம்பரையே பார்வை இழந்த சம்பவம் :

இந்த கிராமத்தின் நிலை குறித்து கேள்விப்பட்ட மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் அங்கு சென்று இதே சந்தேகத்தை தீர்க்க முடிவு செய்து இந்த கேள்வியைக் கேட்டுள்ளார். அப்படித்தான் நமக்கு சந்தேகம் வரும் என்று சிலரை கூப்பிட்டு நம் முன் நிறுத்தி அதிரச் செய்கின்றனர் அந்த கிராமத்து மக்கள். சிலருக்கு கண்பார்வை இல்லாமல் இருந்ததைக் கண்டு முதலில் யாரும் பெரிய அளவில் அதிர்ச்சியடையவில்லை என்றாலும், அவர்கள் கூறிய கதை பத்திரிகையாளரை அதிரச் செய்ததாகக் கூறப்படுகிறது. திருட்டில் ஈடுபட்ட ஒருவரது பரம்பரையே முழுக்க முழுக்க பார்வை இழந்துவிட்டதாம். அவருக்கு பிறக்கும் குழந்தைகள், பேரன் பேத்திகளுக்கும் இதே நிலைமைதான். ஆனாலும் அறிவியல் பூர்வமாக அவர்களுக்கு ஏதோ நோய் காரணமாகவே கண் பார்வை போனதாக கூறப்படுகிறது. எனினும் இது அந்த கிராமத்தினரின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லையாம்.

கால போக்கில் சுற்றுலாத்தலமாக மாறிய மர்ம கிராமம் :

இந்த கிராமம் பல ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருந்தாலும், இங்குவரும் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்கும் இங்கு நிறைய இடங்கள் இருக்கின்றன.


பல ஆச்சர்யங்கள் நிறைந்த சனி ஷிங்கனாப்பூர் கிராமத்தின் மற்றுமொரு கதவில்லாத வீடு

லெண்டி பூங்கா :

ஷிர்டி - மன்மாத் சாலையில் மிக அழகாக காணப்படும் ஒரு பூங்கா இந்த லெண்டி பார்க். இந்த பூங்காவில் சாய் பாபா பெரும்பாலான நேரத்தை செலவழித்ததாக கூறப்படுகிறது. இந்த பூங்காவில் ஒரு கல் இருந்ததாகவும், அது அங்கிருந்த கிராமவாசிகளால் துணி துவைப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் ஒரு நாள் அந்த கல்லின் மீது பாபா அமர்ந்திருந்ததை கண்ட மக்கள், அதன் பின்னர் அந்த கல்லை துவாரகமாயி மசூதிக்கு கொண்டுவந்து புனிதப்பொருளாக வைத்ததாகவும் கூறப்படுகிறது.

சமாதி மந்திர் :

முற்காலத்தில் இந்த சமாதி மந்திர் ஒரு கோடீஸ்வரருக்கு சொந்தமான கோவிலாக இருந்ததாகவும், சாய் பாபாவின் தீவிர பக்தராக இருந்த அந்த கோடீஸ்வரர், இந்த கோவிலில் முரளிதர் சிலையை பிரதிஷ்டை செய்ய விரும்பியபோது சாய் பாபாவே முரளிதராக மாறி இந்த கோவிலில் குடி கொண்டதாகவும், அதன் பின்னரே அது இன்றைய சமாதி மந்திர் எனும் கோவிலாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது.

Updated On 15 July 2024 6:17 PM GMT
ராணி

ராணி

Next Story