இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வடகிழக்கு மாநிலங்களை பசுமையின் தொட்டில் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இயற்கையின் அழகு கொட்டிக்கிடக்கும். அதிலும் மேகாலயா மாநிலம், வடகிழக்கு நுழைவு வாயில் என்றும், மேகங்களின் உறைவிடம் என்றும் மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிறது. குறிப்பாக மேகாலயா என்று எடுத்துக்கொண்டால் 11 மலைத்தொடர்களுக்கு இடையில் அழகாய், வனப்பாய் அமைந்துள்ள இடம் என்றே கூறலாம். இயற்கையின் அனைத்து வடிவங்களிலும் நிகரற்ற அழகுடன் இருக்கும் அழகான மாநிலமான மேகாலயா, சுற்றிபார்ப்பதற்கு எண்ணற்ற சுற்றுலாத் தலங்களைக் கொண்ட ஒரு வித்தியாசமான உலகமாகும். அங்கு குகைகள், பழமையான நீர்நிலைகள், வடக்கிலிருந்து தெற்கு மற்றும் கிழக்கிலிருந்து மேற்கு வரை எப்போதும் பசுமை நிறைந்திருக்கும். கற்பனைக்கு எட்டாத அற்புதமான இடங்களை கொண்ட இந்தியாவில் பார்க்க வேண்டிய மிக அழகான மாநிலங்களில் ஒன்றாக திகழும் மேகாலயாவின் சிறப்பையும், அங்கு சுற்றி பார்க்க வேண்டிய இடங்களை பற்றியும் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நார்டியான் மோனோலிதிக்ஸ் கல் நினைவகம் :

இந்தியாவின் பழமையான இடங்களில் இந்த நார்டியான் மோனோலிதிக்ஸ் கல் நினைவகமும் ஒன்று. இயற்கையாகவே இங்கு பல மீட்டர் உயரத்திற்கு கற்கள் அமைந்திருக்கும். புல்வெளிகளுக்கு மத்தியில் ஆங்காங்கே கற்கள் அமைந்திருப்பது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். ஒவ்வொரு கற்களும் 8 மீட்டர் உயரத்திற்கு இருக்கும். புகைப்படம் எடுத்துக்கொள்ள இதை விட சிறந்த இடம் இருக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் இந்த இடத்தில் பல பாலிவுட் பாடல்களை படம் பிடித்துள்ளனர். இங்கு இருக்கும் கற்கள், கற்காலம் தொட்டே இருந்து வருவதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இங்கு அனுமதி இலவசம் என்றாலும் பார்க்கிங் வசதி இல்லை.


இந்தியாவில் பழமையான இடங்களில் ஒன்றான நார்டியான் மோனோலிதிக்ஸ் கல் நினைவகம்

உமியாம் ஏரி :

பாரா பாணி என மற்றொரு பெயரில் அழைக்கப்படும் இந்த ஏரிக்கு மிகப்பெரிய வரலாறு இருக்கின்றது. அது என்னவென்றால்,1960ஆம் ஆண்டு பாசன வசதிக்காக செயற்கையாக அசாம் அரசால் உருவாக்கப்பட்டதுதான் இந்த உமியாம் ஏரி. ஷில்லாங் நகரில் மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த ஏரி எப்பொழுதும் பரபரப்பாகவே இருக்கும். இரவு 6 மணிக்கு மேல் ஏரியில் விளையாட அனுமதி கிடையாது. மற்றபடி ஏரியை சுற்றி எப்பொழுதும் உணவகங்கள், நொறுக்குத்தீனி கடைகள் என்று பரபரப்பாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் மேகாலயாவில் இந்த ஏரியில் மட்டுமே பல விதமான நீர் விளையாட்டுகள் இருக்கின்றன. ஒவ்வொரு விளையாட்டிற்கும் குறைந்த பட்சம் 200 ரூபாயிலிருந்து வசூலிப்பார்கள். இங்கு பார்க்கிங் வசதி உள்ளது.


பாசன வசதிக்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட உமியாம் ஏரி

தலைநகர் ஷில்லாங் :

மேகாலயாவிற்கு வரும் நபர்கள் தவறாமல் சுற்றி பார்க்க வேண்டிய இடம் ஷில்லாங் நகரம். இங்கு சுற்றி பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. அதில் முதலாவது யானை நீர்வீழ்ச்சி, யானை வடிவில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவர். கோடைகாலத்தில் இந்த இடம் சற்று கூட்டமாகத்தான் இருக்கும். ஷில்லாங்கில் உள்ள காபன் நோங்லைட் பூங்காவில் ஏராளமான விலங்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பூங்காவை சுற்றிப்பார்க்க 10 மணியிலிருந்து 4 மணி வரை மட்டுமே அனுமதி கொடுக்கப்படும். ஏனென்றால் வடகிழக்கு மாநிலங்களில் சூரிய அஸ்தமனம் விரைவில் நடந்துவிடும். அதனால் 4 மணிக்கெல்லாம் வானம் இருண்டுவிடும். எனவே இந்த பூங்காவை நீங்கள் சுற்றி பார்க்க விரும்பினால் சீக்கிரமே சென்றுவிடுவது நல்லது. அடுத்ததாக ஷில்லாங் நகரின் மத்தியில் மேகாலயா அரசின் மியூசியம் ஒன்று இருக்கிறது. மேகாலயாவின் வரலாறு மற்றும் அதன் சிறப்பை விளக்கும் விதமாக இந்த மியூசியம் அமைந்துள்ளது.


ஷில்லாங்கில் அமைந்துள்ள குடியிருப்புகள் - அழகிய நீர்வீழ்ச்சி - வரலாற்று சிறப்புமிக்க மியூசியம்

சிரபுஞ்சி நகரம் :

இந்த சிரபுஞ்சி நகரம் தமிழகத்தில் இருக்கும் ஊட்டியை போன்றது. எப்பொழுதும் குளிராக இருக்கும். ஆதலால் இங்கு நல்ல தங்கும் விடுதிகளை எடுத்து ஓய்வு எடுக்கலாம். இரவு நேரங்களில் குளிருக்கு இதமாக பார்பிக்யூ சமைத்தும் சாப்பிடலாம். அதன் பிறகு இங்கு இருக்கும் தொங்கும் பாலம் மிகவும் பிரபலம். இரண்டு மரங்களின் வேர்கள் இணைந்து பாலம் போன்று அமைந்திருக்கும். இப்பகுதியில் நிறைய திரைப்படங்கள் படம் பிடிக்கப்படுகின்றன. தமிழில் கயல் படத்தில் ஒரு காட்சி இங்கு படமாக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் சிரபுஞ்சி நகரை சுற்றியும் அதிகமான நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. சிரபுஞ்சி நகரை சுற்றி பார்ப்பதற்கு குறைந்த பட்சம் 2 நாட்களாவது தேவைப்படும்.


சிரபுஞ்சியின் எழில்மிகு காட்சி மற்றும் தொங்கு பாலங்கள்

மவ்ஸ்மாய் குகை :

சொஹ்ரா நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் அமைத்திருக்கிறது மவ்ஸ்மாய் குகை. சாகச பிரியர்களுக்கு இந்த குகை மிகவும் பிடிக்கும். ஏனென்றால் இங்கு அடர்ந்த இருட்டில் தீப்பந்தத்தை வைத்துக்கொண்டு ட்ரெக்கிங் செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே இந்த குகையில் அனுமதி உண்டு. ஆசியாவில் இருக்கும் பழமையான குகைகளில் இதுவும் ஒன்று. உலகில் இருக்கும் ஏராளாமான சாகச பிரியர்கள் இங்கு வந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த குகைகளுக்கு அருகிலேயே சிப்லிங் விளையாட்டும் இருக்கின்றது. அதனால் இந்த குகைகளுக்கு வரும் சுற்றுலாபயணிகள் சிப்லிங் விளையாட்டையும் ரசித்து விளையாடலாம்.


சாகச பிரியர்களின் சொர்க்க பூமியான மவ்ஸ்மாய் குகை

நோகலிக்காய் நீர்வீழ்ச்சி :

இந்தியாவில் இருக்கும் நீளமான நீர்வீழ்ச்சி இந்த நோகலிக்காய் நீர்வீழ்ச்சி, சொஹ்ரா நகரத்தின் அருகில் இது அமைந்திருக்கிறது. 350 மீட்டர் உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூரத்திலிருந்து மட்டுமே நீர்வீழ்ச்சியை ரசிக்க முடியும். ஏனென்றால் அடர்ந்த காட்டுக்குள் சென்று இந்த நீர் வீழ்ச்சியை காண வேண்டும். அத்துடன் நீர்வீழ்ச்சியை சுற்றி அதிகமான கற்கள் இருப்பதால் அவ்வளவு எளிதில் நீர்வீழ்ச்சியை அடைந்திட முடியாது. அதேநேரம் நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்காக உள்ள வியூ பாயிண்டில் நேரம் செலவிடுவது சிறப்பாக இருக்கும். வித விதமான உணவுகள், சிறு சிறு விளையாட்டுகள் என்று நேரத்தை அற்புதமாக செலவு செய்யலாம்.


இந்தியாவில் இருக்கும் நீளமான நீர்வீழ்ச்சி - நோகலிக்காய் நீர்வீழ்ச்சி

சுற்றுலா இடங்களுடன்கூடிய மேகாலயாவின் வரைபடம் :

Updated On 3 Jun 2024 6:12 PM GMT
ராணி

ராணி

Next Story