இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நமது தமிழ்நாட்டின் வீரத்தை உலகளவில் வெளிப்படுத்தும் ஒரே மங்காத ஆரோக்கியமான விளையாட்டு கபடி!!!.கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்குடிமக்களால் பல காலமாக விளையாடப்படும் ஒன்று. ஜல்லிக்கட்டிற்கு (ஏறு தழுவுதல்) தயாராகும்முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது. கபடி என்பது வேகம், உடல் வலிமை, மூச்சுக் கட்டுப்பாடு மற்றும் உத்தி ஆகியவற்றின் கலவையாகும். இது இந்தியாவின் தேசிய விளையாட்டுகளில் ஒன்றாக மதிக்கப்படுகிறது மற்றும் உலகளவில் அதன் பிரபலம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்த வீர விளையாட்டை பற்றி விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.


இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டான கபடி

கபடி வரலாறு

கபடி என்பது இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும். இது சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்த விளையாட்டு தமிழ்நாட்டில் தோன்றி, பின்னர் இந்தியா முழுவதும் பரவியது. பண்டைய காலத்தில், போர்வீரர்களின் உடல் திறனை மேம்படுத்தவும், மன உறுதியை வளர்க்கவும் கபடி பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் இது ஒரு பிரபலமான விளையாட்டாக மாறி, இப்போது பல ஆசிய நாடுகளில் விளையாடப்படுகிறது. 1938ல் கபடி விளையாட்டு முதன்முதலாக இந்திய விளையாட்டு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு 1990 முதல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இது ஒரு போட்டி நிகழ்வாக இடம்பெற்றது.


4,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கபடி விளையாட்டு

கபடி விளையாட்டின் அடிப்படை விதிகள்

இவ்விளையாட்டில் ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் இருப்பார்கள். 5 வீரர்கள் மாற்று வீரர்களாக இருப்பார்கள். பிறகு இதன் ஆட்டக்களம் 13 x 10 மீட்டர் அளவுள்ள தரையில் விளையாடப்படுகிறது. நடுக்கோடு இரு அணிகளின் பகுதிகளையும் பிரிக்கிறது. இந்த ஆட்டத்தின் நேர அளவு ஒரு போட்டி இரண்டு 20 நிமிட பாதிகளாக பிரிக்கப்பட்டு, இடையில் 5 நிமிட இடைவேளை உண்டு. இந்த விளையாட்டின் முக்கிய விதி ஒரு வீரர் (ரெய்டர்) எதிரணியின் பகுதிக்குள் நுழைந்து, "கபடி, கபடி" என்று தொடர்ந்து உச்சரித்தபடி, எதிரணி வீரர்களைத் தொட முயற்சிக்க வேண்டும். ஒரு மூச்சில் இதைச் செய்ய வேண்டும். பின்னர் ரெய்டர் எதிரணி வீரர்களைத் தொட்டுவிட்டு தனது பகுதிக்குத் திரும்பினால் புள்ளிகள் கிடைக்கும். எதிரணியினர் ரெய்டரைப் பிடித்து நிறுத்தினால் அவர்களுக்குப் புள்ளி கிடைக்கும். இப்படிதான் விளையாட்டின் புள்ளிகள் தீர்மானிக்கப்படுகின்றன. அதன்பிறகு தொடப்பட்ட வீரர்கள் ஆட்டமிழப்பார்கள். ஆனால் அடுத்த ரெய்டில் தங்கள் அணி வெற்றி பெற்றால் மீண்டும் ஆட்டத்தில் சேரலாம். எப்படி வெற்றி தீர்மானிக்கப்படும் என்றால் அதிக புள்ளிகள் பெற்ற அணி வெற்றி பெறும்.


கபடியின் வளர்ச்சியில் முக்கிய மைல்கல் "ப்ரோ கபடி லீக்"

கபடி விளையாட்டின் நவீன வளர்ச்சி

கபடி விளையாட்டு கடந்த சில தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. 1990ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிகாரப்பூர்வ நிகழ்வாக சேர்க்கப்பட்டது கபடியின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். அதன்பிறகு தொழில்முறை லீக்குகள் மூலம் கபடி பிரபலமடைய ஆரம்பித்தது. 2014ல் "ப்ரோ கபடி லீக்" (PKL) தொடங்கப்பட்டது. இது விளையாட்டின் பிரபலத்தை பெருமளவில் அதிகரித்தது. இது உலகெங்கிலும் உள்ள வீரர்களை ஈர்த்து, விளையாட்டை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தியது. இதன்மூலம் கபடி விளையாட்டு தொழில்நுட்ப முறையில் பல முன்னேற்றங்கள் அடைந்தது. நவீன காலத்தில், கபடி விளையாட்டில் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முதலில் சிறந்த தரமான விளையாட்டு மைதானங்கள், அதன்பிறகு மேம்பட்ட ஒளிபரப்பு தொழில்நுட்பங்கள், வீடியோ மறுஆய்வு முறை ஆகியவை இவ்விளையாட்டை மென்மேலும் உயர்த்தின.


கபடி விளையாட்டில் பெண்களின் பங்கேற்பு அதிகரிப்பு

பயிற்சி முறைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி

நவீன கபடி வீரர்கள் அறிவியல் பூர்வமான பயிற்சி முறைகளைப் பின்பற்றுகின்றனர். இதில் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, மன ஆற்றல் பயிற்சி போன்றவை அடங்கும். தற்போது கபடி விளையாட்டில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. பெண்கள் கபடி அணிகள் மற்றும் போட்டிகள் அதிகரித்து வருகின்றன. இது விளையாட்டின் பாலின சமத்துவத்தை மேம்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கபடி இப்போது ஆசியாவிற்கு வெளியேயும் பிரபலமாகி வருகிறது. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கபடி அணிகள் உருவாகி வருகின்றன. குறிப்பாக தொலைக்காட்சி ஒளிபரப்புகள், சமூக ஊடகங்கள் மற்றும் இணைய ஊடகங்களின் மூலம் கபடி மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. இது விளையாட்டின் ரசிகர் அடித்தளத்தை பெருமளவில் விரிவுபடுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தொழில்முறை லீக்குகள் மூலம் கபடி வீரர்களுக்கு சிறந்த வருமான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இது இளம் தலைமுறையினரை இந்த விளையாட்டின்பால் ஈர்க்கிறது.


இளம் தலைமுறையினரை ஈர்க்கும் கபடி விளையாட்டு

கபடி விளையாட்டின் பிரபலமான யுக்திகள்

கபடி விளையாட்டில் வெற்றி பெற பல உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கே சில முக்கியமான உத்திகளைப் பார்ப்போம். முதலில் டோ டச் (Toe Touch). இது ரெய்டர் எதிரணியின் பகுதிக்குள் நுழைந்து, தனது கால் விரலால் எதிராளியின் உடலின் எந்தப் பகுதியையாவது தொட்டுவிட்டு, விரைவாக தனது பகுதிக்குத் திரும்புவார். இது வேகமான புள்ளிகளைப் பெற உதவும் ஒரு பாதுகாப்பான உத்தி. அதன்பிறகு டப்கி (Dubki). இந்த யுக்தி எப்படியென்றால் ரெய்டர் தனது உடலை குனிந்த நிலையில் வைத்துக்கொண்டு, எதிராளிகளின் கைகளுக்கு இடையே நழுவி செல்வார். இது எதிராளிகளின் பிடியிலிருந்து தப்பிக்க உதவும் ஒரு திறமையான உத்தி. பிறகு ஃபெயின்ட் (Faint) யுக்தி. இது ரெய்டர் ஒரு திசையில் செல்வதுபோல் பாவனை செய்து, திடீரென வேறொரு திசையில் திரும்புவார். இது எதிராளிகளை குழப்பி, அவர்களின் பிடியிலிருந்து தப்பிக்க உதவும். அதன்பிறகு ஜம்பிங் கிக் (Jumping Kick). இது ரெய்டர் உயரே குதித்து, கால்களால் எதிராளிகளைத் தொட முயற்சிப்பார். இது அதிக எண்ணிக்கையிலான எதிராளிகளைத் தொட உதவும். ஆனால் அபாயகரமானதாகவும் இருக்கலாம். இறுதியில் ப்ளாக் (Block). பாதுகாக்கும் அணி வீரர்கள் கைகளை கோர்த்து ஒரு வலுவான தடுப்பு அமைப்பார்கள். இது ரெய்டரை பிடிக்க உதவும் ஒரு முக்கியமான பாதுகாப்பு உத்தி.

Updated On 21 Oct 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story