இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்துள்ளார் பழங்குடி பெண் மின்னு மணி. சீனியர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் கேரள கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல்முறை. தடகளம், கால்பந்து மற்றும் கைப்பந்து போன்ற விளையாட்டுகளில் மிகப்பெரிய நட்சத்திரங்களை உருவாக்கிய கேரள மாநிலம், இந்திய விளையாட்டுகளின் சக்தி மையங்களில் ஒன்றாக இருந்தாலும், கிரிக்கெட் என்று வரும்போது விரல்விட்டு என்னும் அளவுக்கே அம்மாநிலத்தில் இருந்து தேசிய அணியில் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். டினு யோஹன்னன், எஸ். ஸ்ரீசாந்த், சஞ்சு சாம்சன் மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய நான்கு பேர் மட்டுமே இதுவரை இந்தியாவுக்காக விளையாடியுள்ளனர்.

கேரள பழங்குடியினத்தை சேர்ந்த மின்னு மணி

யார் இந்த மின்னு மணி?

கேரளாவின் வயநாடு மாவட்டம் மானந்தவாடியில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி வந்த மின்னு மணி, நாளாக நாளாக அந்த விளையாட்டை நேசிக்க ஆரம்பித்தார். ஆனால், மின்னுவின் குடும்பத்திற்கு அவர் கிரிக்கெட் விளையாடுவது சுத்தமாக பிடிக்கவில்லை. ஏனெனில், அப்போது பெண் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவது பெரிதாக பாராட்டப்படவில்லை. மின்னுவின் குடும்பம் மிகவும் வறுமையானது. இவரது தந்தை மணி கூலித்தொழிலாளி, தாய் வசந்தா இல்லத்தரசியாக இருந்து வருகிறார். இதனால் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த மின்னுவின் குடும்பத்தினர், விளையாட்டில் கவனம் செலுத்தவிடவில்லை.

கிரிக்கெட் பயிற்சியில் மின்னு மணி

மின்னுவின் ஆரம்பகாலம்

வயநாட்டில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே வயல்வெளியில் அக்கம்பக்க சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும்போது ஒரு ஃபீல்டராக பந்துகளை எடுக்கச் சென்ற மின்னு, ஒருகட்டத்தில் தானும் கிரிக்கெட்டை நேசிக்க துவங்கினார். சிறுவர்களுடன் விளையாடும் போது, மின்னு ஒரு ஃபீல்டராக மட்டுமே இருப்பார். பேட் செய்யவோ அல்லது பந்து வீசவோ அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அவர் கிரிக்கெட் விளையாடுவது பிடிக்காது. காரணம் கிரிக்கெட், பெண்களின் விளையாட்டு அல்ல என்று கருதப்பட்டதே. ஆனால் மின்னு விளையாடுவதை நிறுத்தவில்லை. அந்த அளவுக்கு கிரிக்கெட் மீது அவருக்கு விருப்பம். அந்த விருப்பத்துக்கான அங்கீகாரம், அவர் படித்த பள்ளியில் கிடைத்தது.

கேரள அணிக்காக விளையாடிய மின்னு மணி

மின்னுவின் ஆரம்பக்கால கிரிக்கெட்

மின்னுவின் கிரிக்கெட் கனவிற்கு அவரது, உடற்கல்வி ஆசிரியையான எல்சம்மா உயிர் கொடுத்தார். வயநாடு கிரிகெட் சங்கத்தின் பயிற்சியாளர் ஷானவாஸிடம் அறிமுகப்படுத்தினார். அதுவரை மாவட்ட அளவில் விளையாடி வந்த மின்னு, மாநில அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க ஆரம்பித்தார். அவரின் வளர்ச்சி அதோடு நின்றுவிடவில்லை. அங்கிருந்து தென் இந்திய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டார். இந்தப் போட்டிகள் அனைத்திலும் இவரது ஆல்-ரவுண்டர் திறமை வெளிப்பட்டது. அதுதான் அவரை உச்சானி கொம்பில் ஏற்றி வைத்தது.


ஸ்மிருதி மந்தனாவிடம் இருந்து அறிமுக தொப்பியை வாங்கிய மின்னு மணி

உள்ளூர் போட்டிகளில் அசத்திய மின்னு

மின்னு, தனது 16 வயதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சீனியர் கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். தனது கனவை மெய்ப்பிக்க போராடிக்கொண்டிருந்த மின்னுவின் வாழ்க்கையில் 2018ம் ஆண்டு சோதனைக்காலமாக அமைந்தது. அந்த ஆண்டு கேரளாவில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மின்னுவின் வீடு இடிந்து விழுந்தது. இருப்பினும், மனம் தளாராமல் மின்னு தனது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். அதே ஆண்டு U23 T20 கோப்பையில் கேரளாவுக்காக அதிக ரன் குவித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 7 இன்னிங்ஸ்களில் 188 ரன்கள் குவித்தார். மேலும் U-23 இறுதிப் போட்டியில் மகாராஷ்டிராவை வீழ்த்தி கேரளா பட்டத்தை வென்றது.

இந்திய அணிக்காக மின்னு மணி அறிமுகமானபோது

சர்வதேச கிரிக்கெட்டில் மின்னு

வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் குரிச்சியா இனத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணான மின்னு மணி, இந்திய மகளிர் அணிக்கு தேர்வாகியுள்ளார். சீனியர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் கேரள கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல்முறை. டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் வலது கை ஆஃப் ஸ்பின்னர் மட்டுமல்ல, மின்னு சிறந்த ஃபீல்டரும் கூட. இந்திய அணிக்கான ஆல்-ரவுண்டராக மின்னுவின் தேர்வு கேரளாவின் இளம் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில் மின்னு

மகளிருக்கான முதல் பிரீமியர் லீக் தொடர் என்பதால் ஏலத்தின் போதே கடும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. இந்த ஏலத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேரளாவை சேர்ந்த மின்னு மணியை 30 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இது குறித்து பேசிய மின்னு "என்னுடைய மகிழ்ச்சியை விவரிக்க என்னிடத்தில் வார்த்தைகளே இல்லை. இவ்வளவு பெரிய தொகையை நான் பார்த்தது கூட கிடையாது. இந்த பணத்தை கொண்டு எனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்க வேண்டும் என நினைக்கிறேன்" என்று கூறினார்.

Updated On 4 March 2025 10:18 AM IST
ராணி

ராணி

Next Story