இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ஹாசினியைப் போன்ற ஒரு பெண்ணை நிஜ வாழ்க்கையில் பார்க்கமாட்டோமா? என ஏங்கிய பல இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும்விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் தேவதையாக நுழைந்தவர் ஓவியா. தமிழில் இந்நிகழ்ச்சியை தொடங்கியபோது கமலிற்காக பார்த்தவர்களைவிட ஓவியாவின் க்யூட்னஸுக்காக வாரம் முழுக்க ஷோ பார்த்தவர்கள்தான் அதிகம். ஏனென்றால் நடிகர் நடிகைகளை பொருத்தவரை திரைக்கு முன்னால் ஒருமாதிரி இருப்பார்கள், திரைக்கு பின்னால் வேறு மாதிரி இருப்பார்கள் என்று பலர் சொல்வதுண்டு. ஆனால், ‘இதுதான் நான்; நான் இப்படித்தான் இருப்பேன்’ என சொல்வது மட்டுமல்லாமல், தனது எதார்த்தமான பேச்சு, வெளிப்படைத்தன்மை மற்றும் உண்மையான உணர்ச்சிகளை கேமிரா முன்பு காட்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் ஓவியா. கேரள பெண்ணாக இருந்தாலும் தமிழில் நடிக்க ஆரம்பித்தபோதே ராசியான ஹீரோயின் என்ற பெயரை பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நிறையப்பேருக்கு வாய்ப்புகள் தேடிவந்தாலும் ஓவியாவுக்கு ஏனோ அந்நிகழ்ச்சி கைகொடுக்கவில்லை. மக்கள் மனதில் இடம்பிடித்த இவரை சர்ச்சைகளும் விடாது துரத்திக்கொண்டே இருக்கின்றன. இடையே திரையுலகிலிருந்து விலகியிருந்த ஓவியா குறித்த செய்திகள்தான் தற்போது ஹாட் டாப்பிக்காக சுற்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த சூழ்நிலையை அசால்ட்டாக லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்துவரும் ஓவியாவின் திரை வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி குறித்து சற்று திரும்பி பார்க்கலாம்.

ராசியான ஹீரோயின்!

கேரள மாநிலம் திரிச்சூரை பூர்வீகமாகக்கொண்டவர் ஓவியா. அங்கு பள்ளி கல்லூரி படிப்பை முடித்த இவர் முதலில் துணைவேடங்களில் நடித்திருந்தாலும் 2007ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படமான ‘கங்காரு’ மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அங்கு ஓரிரு படங்களில் நடித்த ஓவியாவுக்கு 2010ஆம் ஆண்டு தமிழில் விமல் ஜோடியாக ‘களவாணி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் படத்திலேயே பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடிக்க, அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மன்மதன் அம்பு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மலையாளம், தமிழ் என மாறி மாறி நடித்துவந்த இவர், ‘கிராடகா’ படத்தின்மூலம் கன்னடத்திலும் அறிமுகமானார்.


‘களவாணி’ படத்தின்மூலம் தமிழில் அறிமுகமான ஓவியா

அடுத்து சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமான ‘மெரினா’ படத்திலும் சொப்பனசுந்தரி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அசத்தினார். அதனால் ‘கலகலப்பு’, ‘சில்லுனு ஒரு சந்திப்பு’, ‘மூடர்கூடம்’, ‘மத யானை கூட்டம்’ போன்ற அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடிவந்தன. இப்போது தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோக்களான சிவகார்த்திகேயன், விமல் மற்றும் கதிர் ஆகிய மூன்றுபேரின் அறிமுகப்படங்களிலும் கதாநாயகியாக நடித்த ஓவியா மிகவும் ராசியான ஹீரோயின் என்ற பெயரை பெற்றார். ஆனால் அதன்பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் பெருமளவில் வெற்றிபெறவில்லை. கிட்டத்தட்ட ஓராண்டுகாலம் சினிமாவில் காணாமல்போன ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார்.

பிக் பாஸால் உருவான ஓவியா ஆர்மி!

பல மொழிகளில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே யார் தொகுத்து வழங்கப்போகிறார்கள்? வீடு செட் எப்படி இருக்கப்போகிறது? போட்டியாளர்கள் யார் யார்? என்ற எதிர்பார்ப்பானது எக்கச்சக்கமாக இருந்தது. கமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என்றதுமே எந்த அளவிற்கு ரசிகர்களுக்கு ஆர்வம் கூடியதோ அதை நிகழ்ச்சி தொடங்கிய ஓரிரு வாரங்களுக்குள் பன்மடங்காக்கினார் போட்டியாளராக களமிறங்கிய ஓவியா. இவருடைய எதார்த்தமான பேச்சு, வெளிப்படைத்தன்மை மற்றும் உண்மையாக பிறரிடம் நடந்துகொள்வது போன்றவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. குறிப்பாக, ஹவுஸ்மேட்ஸ் பலரும் ஓவியாவுக்கு எதிராக நின்றபோதிலும், எந்த காரணத்திற்காகவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாத இவர், தனியாக ஆடுவது, பாடுவது டாஸ்க்குகளில் பங்கேற்பது என தனது முழு உழைப்பையும் போட்டார். ‘இங்க அடிங்க பார்ப்போம்’, ‘ஸ்ப்ரே அடிச்சு போட்டுருவ’, ‘எனக்கு கொஞ்சம் சாப்பாடு குடுங்க’ போன்ற ஓவியாவின் டயலாக்குகள் சோஷியல் மீடியாக்களில் மிகவும் ட்ரெண்டாகின. மேலும், ஒருபக்கம் ஜாலியாக இருந்தாலும் மற்றொரு பக்கம், ‘வாழ்க்கையில் மோசமான தருணங்களும் தேவை. அதிலிருந்துதான் அனுபவம் கிடைக்கும், அதுதான் வாழ்க்கையை புரிய வைக்கும், எனவே மோசமான தருணங்களுக்காக கடவுளுக்கு நான் நன்றிதான் சொல்வேன். அவையெல்லாம் முதலில் புரியாது. போகபோகத்தான் புரியும்’ என்பது போன்ற வாழ்க்கைப்பாடங்களையும் போகிற போக்கில் அசால்டாக சொல்லிவிட்டு போவார் ஓவியா.


தமிழ் பிக் பாஸ் வீட்டிற்குள் கலக்கிய ஓவியா

ஜூலி - ஓவியா சண்டையில் ஓவியாவின் நேர்மையை பார்த்து, இவருக்கு ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐடிகளை உருவாக்கி ஆதரவை திரட்டினர் இவருடைய ரசிகர்கள். ஒருகட்டத்தில் ஹவுஸ்மேட் ஆரவ் மீது காதல்வயப்பட்ட ஓவியா, அதனால் பல்வேறு மனநல பிரச்சினைகளுக்கு ஆளானதுடன், மருத்துவ முத்தம் சர்ச்சையிலும் சிக்கினார். பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் ஓவியாவுக்குத்தான் என ரசிகர்கள் கொண்டாடிவந்த நேரத்தில், யாரும் எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இது போலீஸ் கேஸாக மாறியநிலையில், வீட்டிலிருப்பவர்களை ஏமாற்ற அப்படி செய்ததாக வாக்குமூலம் அளித்தார். அதன்பிறகு ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் அவரை வீட்டிற்குள் அனுப்ப பிக் பாஸ் குழு முயற்சித்தபோதிலும் அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஒரே ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை ஓவியா பெற்றதுபோல இதுவரை வேறு எந்த நடிகர் நடிகைகளும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு தேடுவது என் பழக்கமல்ல!

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதே சினிமா வாய்ப்புகளை பெறுவதற்காகத்தான் என்ற கருத்து நிலவிவரும் நேரத்தில், ஓவியாவிற்கோ அது எதிர்மாறாக அமைந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, நிறைய நேர்காணல்களில் பங்கேற்றிருந்தாலும், சினிமா வாய்ப்புகள் அந்த அளவிற்கு அமையவில்லை. பிக் பாஸிற்கு பிறகு ‘இதி நா லவ் ஸ்டோரி’ என்ற படத்தின்மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன்பிறகு, ‘காஞ்சனா 3’ மற்றும் ‘களவாணி 2’ ஆகிய படங்களில் நடித்த ஓவியாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டன.


சினிமா வாய்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்த ஓவியா

இதுகுறித்து மனம்திறந்த ஓவியா, தனக்கு நம்பர் 1 நடிகையாக வேண்டும், பெரிய படங்கள் பண்ணவேண்டுமென்ற விருப்பமெல்லாம் இல்லை என்று கூறியதுடன், தான் வாய்ப்புத்தேடி எங்கும் போகமாட்டேன் எனவும், தேடிவரும் வாய்ப்புகளுக்கு 100% என்னுடைய பெஸ்ட்டை கொடுக்க மட்டுமே ஆசைப்படுகிறேன் எனவும் கூறியிருந்தார். அதிகப்படியான க்ளாமர், போதை என வலம்வருவதாக கூறப்பட்டாலும் அது குறித்தெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாத ஓவியா, எப்போதும்போல ஃபோட்டோஷூட்களை எடுப்பது, சமூக ஊடகங்களில் ரசிகர்களின் கருத்துகளுக்கு பதில் அளிப்பது என தனது வாழ்க்கையை தனக்கு பிடித்தபடி வாழ்ந்துவந்தார். மேலும் தன்னை பற்றி எழும் விமர்சனங்கள் குறித்து கேட்டால் டி.ஆர்.பிக்காக அப்படி எழுதியிருப்பார்கள் என்று கூலாக பதில் சொல்லிவந்தார்.

ஆபாச படமா? - என்ஜாய்!

கிட்டத்தட்ட 2 வருடங்களாக எந்த மொழி திரைப்படங்களிலும் தலைகாட்டாத ஓவியா குறித்த செய்திகள்தான் தற்போது காட்டுத்தீபோல பரவிவருகின்றன. பொதுவாக நடிகர் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியே கசிந்துவிட்டால், அது நான் இல்லவே இல்லை என்று கூறுவார்கள் அல்லது எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பார்கள். ஆனால், ஓவியாவோ இந்த சூழ்நிலையை மிகவும் துணிச்சலாக நிதானத்துடன் கையாண்டு வருகிறார். அக்டோபர் 12ஆம் தேதி ஓவியாவின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் 17 நொடி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. ஓவியா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படத்துக்கு கமெண்ட் செய்த ஒருவர், ‘17 நொடிகளுக்கு வீடியோ ஒன்று வந்துள்ளது’ என கமெண்ட் செய்ய, சற்றும் எதிர்பாராதவிதமாக ‘என்ஜாய்’ என தக் ரிப்ளை கொடுத்தார் ஓவியா. அடுத்து ஒருவர், வீடியோவின் நீளம் குறைவாக உள்ளது. அதிக நீளமுள்ள வீடியோ கிடைக்குமா என கேட்க, ‘அடுத்தமுறை ப்ரோ’ என கமெண்ட் செய்தார். மற்றொருவர் இதுகுறித்து கேட்க, ‘அந்த லிங்கை எனக்கும் அனுப்புங்கள்’ என்று கேட்டுள்ளார்.


அந்தரங்க வீடியோ குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு ஓவியாவின் பதில்கள்

இப்படி இணையவாசிகளுக்கு கூலாக பதில் கொடுத்துவந்த ஓவியாவுக்கு ஆதரவு அதிகரித்துக்கொண்டே போகிறது. ரசிகர்களிடம் தனது கோபத்தை காட்டாத ஓவியா, இந்த வீடியோ குறித்து திரிச்சூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருப்பதாகவும், அதில் இருப்பது தான் அல்ல என்றும், மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ அது என்றும் அந்த புகாரில் தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தாரிக் என்பவருடன் ஓவியா நெருங்கி பழகிவந்த நிலையில், அவருடைய நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரைவிட்டு பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் கோபமடைந்த தாரிக், ஓவியாவின் ஃபோட்டோவை மார்பிங் செய்து, ஆபாச வீடியோவாக வெளியிட்டிருப்பதாகவும், தாரிக்கிடம் இதுபோல் பல பெண்களின் ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதாகவும் ஓவியாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதுபோன்ற சூழலை ஓவியா நிதானத்துடன் கையாண்டு வருவது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரையும் வெகுவாக கவர்ந்துவருகிறது.

Updated On 22 Oct 2024 4:57 AM GMT
ராணி

ராணி

Next Story