இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல திறமையான வீரர்களை உருவாக்கி இருந்தாலும் சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமலேயே தவற விட்டிருக்கிறது. அப்படி சென்னை அணியில் விளையாடாமல் வேறு அணிக்குச் சென்று தன்னுடைய திறமையை நிரூபித்தவர்தான் சாய் கிஷோர். 26 வயதான சாய் கிஷோர் இரண்டு ஐபிஎல் பட்டம், டிஎன்பிஎல் பட்டம், விஜய் ஹசாரே கோப்பை, சையது முஸ்தாக் கோப்பை என பல பட்டங்களை பெற்று இருக்கிறார். முதலில் சுழற்பந்து வீச்சாளராக அறியப்பட்ட சாய் கிஷோர் அதன்பிறகு பேட்டிங்கில் முக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது ஒரு ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். கடந்த ரஞ்சி சீசனில், தமிழக அணியின் டாப் விக்கெட் டேக்கரான இவர், இந்த ஆண்டு ஒட்டுமொத்த சையது முஷ்தாக் அலி தொடரின் டாப் விக்கெட் டேக்கர். ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், முருகன் அஷ்வின், வருண் சக்கரவர்த்தி, சித்தார்த் என சுழற்பந்துவீச்சாளர்கள் நிறைந்த தமிழக அணியில், அத்தனை போட்டிக்கு மத்தியிலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைத் தக்கவைத்திருக்கிறார், இந்த 23 வயது வீரர். யார் இந்த சாய் கிஷோர்? இவரது கிரிக்கெட் பயணம் எங்கிருந்து ஆரம்பித்தது என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.


தனது தாயார் மற்றும் விஜய் ஹசாரே ட்ராபியுடன் சாய் கிஷோர்

சாய் கிஷோரின் ஆரம்பகாலம்

சாய் கிஷோர் 1996-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி பிறந்தார். அவருக்கு இரட்டை சகோதரனும், உடன்பிறந்த மூத்த சகோதரியும் உள்ளனர். சகோதரர் பெயர் சாய் பிரசாத். சகோதரியின் பெயர் லக்ஷிகா ஸ்ரீ. தாயார் ராஜலட்சுமி மற்றும் தந்தை ரவிஸ்ரீனிவாசன். சாய், பள்ளி மற்றும் கல்லூரியில் நன்றாகப் படித்தார். சென்னையில் உள்ள வியாச வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தனது கல்வியை முடித்தார். பொறியியல் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். பிறகு, விவேகானந்தர் கல்லூரியில் பிசிஏ முடித்தார். பட்டப்படிப்பை முடித்த சாய், கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்தார். அதன் பிறகு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டு, கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற தனது கனவை உருவாக்கினார்.


ஆர்த்தடாக்ஸ் பௌலராக உருவெடுத்த சாய் கிஷோர்

முதல்தர கிரிக்கெட்டில் அசத்தல்

பொறியியல் படிப்புக்கான வேலையை செய்ய முடியாது என்பதை உணர்ந்த சாய் கிஷோர், முழுநேர கிரிக்கெட்டில் ஈடுபட முடிவு செய்தார். அப்போது 19 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு அணிக்காக விளையாடி வந்தார். வேகப்பந்து வீச்சாளராகத்தான் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார், சாய் விரைவில் தனது பந்துவீச்சு பாணியை மாற்றினார். மாவட்ட அளவில் ஆர்த்தடாக்ஸ் பௌலராக மாறினார். 2016-17 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே போட்டியில் தனது முதல்தர கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்தார். அதுமட்டுமில்லாமல் 2018-19 ரஞ்சி டிராஃபியில் 6 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது சாயின் கிரிக்கெட் பயணத்தில் பெரிய திருப்புமுனையாக இருந்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடிய சாய் கிஷோர், சண்டைக்கும் மிகவும் பிரபலமானார். குறிப்பாக துவக்க சீசனில் ஜெகதீசனுடன் சிறு சண்டை போட்டார்.


சிஎஸ்கே அணியில் ஏலம் எடுக்கப்பட்ட சாய் கிஷோர் - ஐபிஎல்லில் குஜராத் அணிக்காக விளையாடியபோது

ஐபிஎல்லில் வாய்ப்புக்காக காத்திருந்த சாய் :

சாய் கிஷோரை, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 2020-இல் வாங்கியது. ஏலத்தில் 20 லட்சம் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டார். சிஎஸ்கே பயிற்சி முகாமின் போது, இந்திய முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியிடம் பயிற்சி பெற்றார். ஆனால் அவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் குஜராத் அணிக்காக 3 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். அந்த சீஸனின் இறுதியில் ஐபிஎல்லில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. 5 போட்டிகளில் எட்டிற்கும் குறைவான எகனாமியில் இருப்பினும், அவருக்கு 2023 சீசனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது நடப்பு ரஞ்சி சீசனில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் குஜராத் அணியின் ஆஸ்தான பந்துவீச்சாளராக மாறிவிட்டார் சாய் கிஷோர்.


ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப்பங்கு வகித்த சாய் கிஷோர்

சர்வதேச கிரிக்கெட்

கோவிட்-19 பான்டமிக் காரணமாக, இந்திய அணியில் மாற்று வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சாய். அந்த நேரத்தில் இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். சுற்றுப்பயணத்தின் இறுதி இரண்டு டி20 போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால், அந்த சுற்றுப்பயணத்தில் அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. அதன்பின் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆசிய கோப்பையில் இடம்பிடித்தார். அந்த போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு மிகமுக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில், T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியில் சாய் கிஷோர் தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Updated On 8 April 2024 6:23 PM GMT
ராணி

ராணி

Next Story