இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்த உலகில் ஒவ்வொரு செயலை செய்வதற்கும் காதலும், ஆசையும் அதிகமாக தேவைப்படுகிறது. அந்த காதல் ஒரு நபரின் மீதோ, பொருளின் மீதோ, ஒரு உணவின் மீதோ, நம் வேலையின் மீதோ வரலாம். அது நம்மை ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அழைத்து செல்லும். நம்மை அது அழிக்கவும் செய்யலாம் அல்லது அடுத்த கட்டத்திற்கு அழைத்தும் செல்லலாம். தற்போது சிறு சிறு ஈர்ப்பை கூட காதல் என்று நினைத்து கொண்டு இளைஞர்கள் உலாவுகின்றனர். ஒரு சில படங்களை பார்த்து இதுதான் காதலிக்கும் முறை என்று தவறாக புரிந்து கொண்டு தவறான காதல் முறையை அணுகுகின்றனர். எது காதல்? காதலின் வகைகள் என்ன ? எப்படி காதலை அணுக வேண்டும் என்பதை பற்றியெல்லாம் விளக்குகிறார் ஊடக உளவியலாளர் ஐஸ்வர்யா.

காதலின் வகைகள் என்னனென்ன ?

இந்த உலகில் 8 வகையான காதல்கள் உள்ளன. முதலாவது காமம் நிறைந்த காதல். எப்படியென்றால், அவர்களுக்கு உடம்பின் மீது அதிக ஈர்ப்பு இருக்கும், ஓகே கண்மணி படத்தில் வருவது போன்று இருக்கும். இரண்டாவது ஜீவா படத்தில் வருவது போல ஒரு குழந்தைத்தனமான காதல். இந்த காதலில் வெகுளித்தனமும், குழந்தைத்தனமும் அதிகமாக இருக்கும். மூன்றாவதாக சுய அன்பு. குயின் படத்தில் வரும் கங்கனாவை போன்று இருப்பது. தன்மீது அலாதி அன்பும் காதலும் கொள்வது. நான்காவது மேனியா எனப்படும் காதல். இந்த வகையான காதல் நாம் காதலிப்பவர் மீதோ, பொருளின் மீதோ பைத்தியமாக இருப்பது. எடுத்துக்காட்டாக எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவிற்கு சனாவின் மீது இருப்பது. அடுத்ததாக பேலியா எனப்படும் காதல். இந்த காதலானது நமது குடும்பத்தின் மீதோ நபர்களிடமோ வருவது. அடுத்ததாக பிரக்மா என்கிற காதல். இந்த காதல் காலம் கடந்தும் இருக்கும். எப்படியென்றால் காலங்கள் போக போக இன்னும் அந்த காதல் வலிமையாகும். வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவிற்கும் சிம்ரனிற்கும் இடையே இருக்கும் காதலை போன்றது. இன்னொன்று தன் அப்பாவின் மீதும், அம்மாவின் மீதும் காதல். இதை பாசம் எனவும் கூறலாம். கடைசியாக, அன்னை தெரசாவிற்கு இந்த உலக மக்களின் மீது ஏற்பட்ட காதலை போன்றது.


'ஓகே கண்மணி', 'எந்திரன்', 'வாரணம் ஆயிரம்' படங்களின் காதல் காட்சிகள்

மேனியா வகையான காதல் ஆபத்தானதா? எல்லா வகையான காதல் தோல்வியும் ஒரே மாதிரிதான் வலிக்குமா?

எல்லா வகையான காதலிலுமே வலிகள் இருக்கும். ஆனால் ஒரே மாதிரி வலிக்குமா என்று கேட்டால் இல்லை. வலிகள், அனைத்திற்கும் வித்தியாசப்படும். வலிகளை எப்போதும் ஒப்பிட முடியாது. மேனியா வகையான காதல் எப்போதும் சரி கிடையாது. ஒரு நபரின் மீது அதிக அன்பும் ஈர்ப்பும் இருந்தால் ஆபத்தானதே. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. நம் பொருள் மீது அதிக அன்புடன் இருப்பதை கூட ஏற்றுக்கொள்ளலாம். சில நபர்கள், தன் பொருளே இல்லாமல் அதன்மீது பைத்தியம் போல் இருப்பார்கள். ஒரு நபரை தன்னுடையவர் என்று உரிமை கொண்டாடுவது இன்னும் ஆபத்தானது.

அப்படியென்றால் அளவற்ற அன்பு யார்மீதும் வைக்கக் கூடாதா?

சமீபத்தில் அர்ஜுன் ரெட்டி திரைப்பட இயக்குநரின் நேர்காணலை பார்த்தேன். அதில் அவர் அளவற்ற காதலை பற்றி ஒன்று கூறியிருந்தார். என் காதலியை அறையாமல், கெட்ட வார்த்தையில் திட்டாமல் என்னால் எப்படி இருக்க முடியும். அதில் என்ன காதல் இருக்கிறது என்று கேட்டிருந்தார். அது அவருடைய புரிதல். எது அளவற்ற காதல் என்றால் ஒருவர் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவது. அவர்கள் எது செய்தாலும் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான். அதற்கென்று அவர் எந்த தப்பு செய்தாலும் அல்ல. அவர் தவறு செய்தால், இது தவறு, சரி என்று அவர்களுக்கு புரிய வைப்பது. சில நபர்கள் தன்னையும் தாண்டி அவர்களை காதல் செய்வதாக கூறுவார்கள். இது எல்லாம் அளவற்ற காதல் இல்லை.


பிரிவு மற்றும் 'வாரணம் ஆயிரம்' படத்தில் காதல் தோல்வியால் மனம் உடைந்து அழும் சூர்யாவின் புகைப்படம்

ஒரு நபரை ஜட்ஜ் செய்வது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஒருவர் நம்மை இப்படித்தான் என்று ஜட்ஜ் செய்தால் அது நம் தப்பில்லை. அது அவர்களின் எண்ணங்களில் உள்ள அழுக்கு. இப்பொழுது ஒரு குழந்தையை குண்டு என்று கேலி செய்தால் அந்த குழந்தையும் தன்னை விட குண்டாக இருக்கும் குழந்தையை குண்டு என்றுதான் கேலி செய்யும். இது சுழற்சி முறையில் நடந்து கொண்டேதான் இருக்கும். அதனால் ஒரு நபரை இப்படித்தான் என்று ஜட்ஜ் செய்வதை நிறுத்திவிடுங்கள். அதே போல் ஒருவர் உங்களை ஜட்ஜ் செய்தால் அது உங்கள் பிரச்சினையில்லை. அது அவர்களின் மன பிரச்சினை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பழைய படங்களுக்கும், இப்பொழுது வரும் படங்களுக்கும் என்ன வித்தியாசம்?

பழைய படங்களுக்கும், இப்போது வரும் படங்களுக்கும் இடையே இருக்கும் பெரிய வித்தியாசம் என்னவென்றால், பழைய படங்களில் அதிகமாக கற்பழிப்பு காட்சிகள் வரும். தற்போது அது போல் இல்லை. அதேபோல முன்பெல்லாம் இரு வகைகளாக பெண்களை பிரித்து வைத்திருப்பர். முதலாவது தூய்மையான பெண்கள், அப்படியென்றால் படத்தில் வரும் கதாநாயகி. இன்னொன்று கவர்ச்சி நடனம் ஆடுபவர்கள். இப்போது வரும் படங்களிலும் இது இருக்கிறது. ஆனால் பழைய படங்களை போன்று இல்லை.


கதாநாயகி ரோல்களில் நடித்த ஸ்ரீ தேவி மற்றும் கவர்ச்சி நடனங்களில் கலக்கிய சில்க் ஸ்மிதா

அதுபோல முன்பெல்லாம் ஹீரோக்கள் என்றால் நல்லது மட்டுமே செய்வார்கள். வில்லன்கள் எல்லாம் தீய விஷயங்களை செய்வர். ஹீரோக்கள் செய்வதை மட்டுமே மக்களும் செய்வர். தற்போது வரும் படங்களில் ஹீரோக்களே பல கொலைகளை செய்கின்றனர். இதை மாஸ் மொமெண்ட் ஆகவும் மக்கள் கொண்டாடுகின்றனர். இது தவறான செயல். மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். கொலை செய்தால் அதற்கான தண்டனை கிடைக்குமென்று சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் காட்டியிருப்பார்கள். இதைப்போல ஒவ்வொரு இயக்குநரும் சமூக பொறுப்புடன் இருக்க வேண்டும்.

Updated On 22 Jan 2024 6:37 PM GMT
ராணி

ராணி

Next Story