இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அழகாக இருக்கவேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? அதிகம் செலவு செய்து பார்லர்களுக்கு சென்று தங்களை அழகுபடுத்திக்கொள்ள முடியாதவர்கள் வீட்டிலேயே சில எளிய முறைகளை பின்பற்றுவதன்மூலம் தங்களை அழகுபடுத்திக்கொள்ளலாம் என்கிறார் பியூட்டீஷியன் பிரியா.

சரும பராமரிப்பு:

பார்லர்களில் பெடிக்கியூர் மற்றும் மேனிக்யூர் செய்ய க்ரிஸ்டல் சால்ட்டை பயன்படுத்துவார்கள். இதனால் கால்களில் இருக்கும் வெடிப்பு மற்றும் கருமை போன்றவை நீங்கும். இதற்கு மாற்றாக வீட்டிலிருக்கும் உப்புடன், சிறிது எலுமிச்சைச் சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீரில் கலந்து அதில் காலை ஊறவைத்து எடுக்கவேண்டும். இதனை தொடர்ந்து செய்வதால் பாதங்களிலிருக்கும் வெடிப்புகள் நீங்கும்.

இப்போது நிறையப்பேர் டூவிலர்களில் பயணிக்கிறார்கள். இதனால் கழுத்து அதிகமாக கருமையாகிறது. இதனைப் போக்க, சர்க்கரை, டூத் பேஸ்ட், 2 சொட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து அதனை கருமை படிந்த இடங்களில் தடவ கருமை படிப்படியாக குறையும்.

வளர் இளம்பருவத்தினருக்கு முகப்பரு அதிகமாக இருந்தால் சந்தனம் அல்லது முல்தானி மெட்டி அல்லது கடலை மாவுடன் எலுமிச்சைச் சாறு கலந்து தடவினால் முகப்பரு குறைவதுடன், அதனால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.


முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்க தக்காளி - சுகர் ஸ்க்ரப்

வீட்டிலிருக்கும் பெண்கள் பால் காய்ச்சும்போது அதிலிருந்து வெளிவரும் ஆவியில் ஸ்டீம் செய்யலாம். தினமும் இரவு தூங்கப்போகும் முன்பு சிறிது புதினா இலைகளை தண்ணீரில் போட்டுவைத்து காலையில் அந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளிச்சிடும்.

பப்பாளி தோலை வீணாக்காமல் அதனை அரைத்து முகத்தில் பூசிக்கொள்ளலாம். அதேபோல் தக்காளியை இரண்டாக வெட்டி சர்க்கரையை தொட்டு முகத்தை ஸ்க்ரப் செய்தால் முகத்திலிருக்கும் இறந்த செல்கள் நீங்கும்.

கேரட், பப்பாளி, கொய்யா, தக்காளி போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

முடிந்தவரை குழந்தையின் சருமத்தில் செயற்கை மேக்கப்களை போடவேண்டாம்.


இயற்கையான ஹேர் டை

தலைமுடி பராமரிப்பு:

நிறையப்பேருக்கு முடி கொட்டுதல் மற்றும் பொடுகு பிரச்சினை இருக்கிறது. இதனைப் போக்க, தயிரை முடியின் வேர்க்கால்களில் தடவவேண்டும். வேப்பிலைப் பொடியை தயிரில் கலந்தும் பேக்காக போட்டுக்கொள்ளலாம். வெந்தயத்தை அரைத்து பூச முடி மினுமினுப்பாகும். முடிகொட்டுதல் நிற்க, வெங்காயத்தை ஸ்கால்பில் தடவலாம்.

கறிவேப்பிலையை அரைத்து தலைக்கு தேய்க்க, முடி கருமையாவதுடன், அடர்த்தியும் அதிகரிக்கும்.

பார்லர்களில் தலைக்கு கலரிங் செய்யும்போது கண்டிப்பாக முடி சேதமடையும். எனவே வீட்டிலேயே ஹென்னா தயாரித்து பயன்படுத்தலாம். அதனுடன் டீ டிகாக்‌ஷன், எலுமிச்சை, தயிர் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஹென்னா பூசுவதால் முடி கடினமானால் கற்றாழை அல்லது முட்டையை சேர்த்துக்கொள்ளலாம்.

கண் பராமரிப்பு:

கருவளையம் இருப்பவர்கள் வைட்டமின் இ ஆயிலைக் கொண்டு இரவில் தூங்கப்போகும் முன் கண்களைச் சுற்றி மசாஜ் செய்யவேண்டும். இதனால் கருவளையும் நன்றாக குறையும். வைட்டமின் இ ஆயிலுக்கு பதிலாக சோற்று கற்றாழையையும் பயன்படுத்தலாம்.


நக பராமரிப்பிற்கு பயன்படும் எலுமிச்சை

அதிக நேரம் மொபைல் பயன்படுத்துபவர்கள் கண்களை குளுமையாக்க வெள்ளரிக்காய் துண்டுகளை இரவில் தூங்கப்போகும் முன் சிறிது நேரம் கண்களின்மீது வைத்தால் சூடு நீங்குவதுடன், ரத்த ஓட்டமும் சீராகும்.

நக பராமரிப்பு:

உப்பு மற்றும் எலுமிச்சையை நீரில் கலந்து அதில் கைகளை சிறிது நேரம் வைக்கவேண்டும். இதனால் நகம் மென்மையாகும். கால்சியம் அதிகமுள்ள கிழங்குகள் மற்றும் மீன், மட்டன் எலும்புகளை உணவில் சேர்த்துக்கொள்வதும் நல்லது.

சிலருக்கு நகத்தில் சொத்தை இருக்கும். அந்த இடத்தில் எலுமிச்சைச் சாறை பிழிந்துவிடலாம். இதனால் அங்கு படிந்திருக்கும் பூஞ்சை மற்றும் தொற்றுகள் நீங்கும்.

Updated On 12 Feb 2024 6:14 PM GMT
ராணி

ராணி

Next Story