இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

முன்பெல்லாம் முகத்திற்கு இயற்கையான மஞ்சள், சந்தனம் மற்றும் கடலைமாவு போன்றவற்றைத்தான் மேக்கப் பொருட்களாக பயன்படுத்தினார்கள். ஆனால் இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியுடன் அழகுசாதன பொருட்களின் வளர்ச்சி பயன்பாடும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. மேலும் இப்போது பெரும்பாலான பெண்களும் ஆண்களும் சரும நிறத்தை அதிகரிப்பதைவிட இருக்கும் சருமத்தை பராமரிப்பதற்கே ஆர்வம் காட்டுவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இருக்கும் சருமம் க்ளீனாகவும், பொலிவாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் கனவாக இருக்கிறது. அதற்கு நிறைய ஃபேஷியல்கள் வந்துவிட்டன. அப்படி தளர்ந்த முகத்தை இறுக்கி இளமையாக காட்டுவதற்கு செய்யப்படும் ஃபேஷியல்களில் ஒன்றுதான் ஸ்கின் டைட்டனிங் கப்பிங் ஃபேஷியல். அதை செய்துகாட்டுகிறார் அழகுக்கலை நிபுணர் சத்யா.

முதலில் முகத்தை க்ளென்ஸ் செய்து ஏற்கனவே முகத்தில் போட்டிருக்கும் மேக்கப் அல்லது சன் ஸ்க்ரீன் போன்றவற்றை நீக்கவேண்டும். அதற்கு சிறிது க்ளென்சிங் மில்க்கை கையில் எடுத்து கழுத்து மற்றும் முகத்தில் தடவி, நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு அதை ஈரத்துணியால் துடைத்து எடுக்கவேண்டும். துணியில் சிறிது அழுக்குக்கூட படியாமல் முழுமையாக வெள்ளையாகவே இருக்கும் வரை இரண்டு அல்லது மூன்று முறைகூட டீப் க்ளென்ஸ் செய்யலாம். அப்போதுதான் டைட்டனிங் செய்யும்போது முழு ரிசல்ட் கிடைக்கும்.


டீப் க்ளென்சிங் செய்யும் படிநிலைகள்

அடுத்து மைல்டான ஸ்க்ரபர் கொண்டு 2 - 3 நிமிடங்கள் அழுத்தம் கொடுக்காமல் சர்குலர் வடிவில் ஸ்கரப் செய்யவும். பிறகு அதனை சுத்தமாக ஈரத்துணியால் துடைத்து எடுக்கவும். அழுத்தம் கொடுத்தால் முகத்தில் தடிப்புகள் உருவாகிவிடும்.

பிறகு முகத்திலிருக்கும், குறிப்பாக மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை சுற்றிய இறந்த செல்களை அகற்றவேண்டும். முன்பெல்லாம் இறந்த செல்களை அகற்றுவதற்கு ஸ்டீமிங் செய்வார்கள். ஆனால் அடிக்கடி ஸ்டீம் செய்தால் சருமத்திலிருக்கும் கொலாஜனானது இளகி முகம் தளர்ந்துவிடும். எனவே முடிந்தவரை ஸ்டீம் செய்யாமல் இருப்பதே நல்லது.

ஏற்கனவே ஸ்க்ரப் செய்திருப்பதால் மெதுவாக எடுத்தாலே இறந்த செல்கள் எளிதாக வந்துவிடும். இறந்த செல்களை நீக்கியபிறகு டோனர் பூசவேண்டும்.

டோனர் காய்ந்தவுடன்தான் மசாஜ் செய்யவேண்டும். எப்போதும் எடுக்கும் மசாஜ் க்ரீம் அளவைவிட சற்று அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கப்பிங் ஃபேஷியல் செய்யும்போது ஜெல் போன்ற மசாஜ் க்ரீம்களை பயன்படுத்தாமல் க்ரீம் தன்மையுள்ள மசாஜ் க்ரீம்களையே பயன்படுத்த வேண்டும். அதனுடன் ஏதேனும் ஒரு எண்ணெயை சேர்த்து மசாஜ் செய்யலாம்.


இறந்த செல்களை அகற்றி கப்பிங் ஃபேஷியல் செய்தல்

க்ரீமுடன் எண்ணெயை நன்றாக கலந்து அதை சருமத்தில் அப்ளை செய்து முகம் முழுவதும் மீடியம் சைஸ் கப்பைக் கொண்டும், கண்கள், மூக்கு மற்றும் உதடு போன்ற சென்சிட்டிவான பகுதிகளில் சிறிய கப் கொண்டும் மசாஜ் செய்யலாம். கப்பை முகத்தில் வைத்தவுடன் இறுக்கிக்கொள்ளும். இப்போது கப்பை கீழிருந்து மேலாக கொண்டுவந்து எடுக்கவேண்டும். இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதில் தண்ணீர் சேர்க்கக்கூடாது.

முகம் முழுவதும் மீடியம் சைஸ் கப்பால் மசாஜ் செய்தபிறகு, சிறிய கப்பை கொண்டு கண்களை சுற்றியும், கண்களுக்கு மேலும் மசாஜ் கொடுக்கலாம். நிறையப்பேருக்கு கண்களை சுற்றி சுருக்கங்கள் இருக்கும். அவர்களுக்கு இதன்மூலம் நல்ல ரிசல்ட் கிடைக்கும். அதேபோல் மூக்கு மற்றும் உதட்டை சுற்றியும் செய்யவேண்டும்.

இந்த மசாஜை முதல் தடவை செய்யும்போதே நல்ல மாற்றம் தெரியும். தொடர்ந்து 3 அல்லது 4 சிட்டிங்ஸ் செய்தால்தான் முழுமையான ரில்சட் கிடைக்கும். முகப்பரு இருப்பவர்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இதனை செய்யக்கூடாது. எண்ணெய் சருமம் கொண்டவர்கள் மற்ற எண்ணெய்களை தவிர்த்து முருங்கை எண்ணெயை பயன்படுத்தலாம்.


ஃபேஷியலுக்கு பின் பேக் போட்டு ரிலாக்ஸிங் மசாஜ் செய்தல்

குறைந்தது 5 நிமிடங்கள் இந்த மசாஜ் செய்யவேண்டும். ரத்த ஓட்டம் திடீரென அதிகரிப்பதால் சற்று வலி இருக்கும். அதனால் ஈரக்கைகளால் முகத்தை மென்மையாக 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். குறிப்பாக கண்களை ரிலாக்ஸ் செய்யவும். ஏற்கனவே முருங்கை எண்ணெய் அப்ளை செய்திருப்பதால் அதிகமாக தண்ணீர் தேவைப்படாது.

மசாஜ் முழுமையாக முடிந்தபிறகு ஈரத்துணியால் க்ரீமை முழுமையாக துடைத்து எடுக்கவேண்டும். சென்சிட்டிவ் சருமம் இருப்பவர்களுக்கு கப்பிங் செய்யும்போது முகம் சிவந்துவிடும். ஓரிரு மணிநேரத்தில் சருமம் சாதாரணமாகிவிடும்.

க்ரீமை நீக்கியபிறகு கூலாக ஒரு பேக் அப்ளை செய்யவேண்டும். 15 நிமிடங்கள் பேக்கை காயவிட்டு பிறகு ஈரத்துணியால் துடைத்துவிடலாம். கடைசியாக டிஸ்யூ பேப்பர் கொண்டு முகத்தை துடைத்துவிட்டு, சன்ஸ்க்ரீன் தடவி, 6 மணிநேரத்திற்கு சருமத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஃபேஷியலை தொடர்ந்து செய்துவர சருமம் இறுகுவதுடன் முகம் பொலிவுறும்.

Updated On 11 March 2024 6:18 PM GMT
ராணி

ராணி

Next Story